• June 7, 2025

தேர்தலுக்கு முன்பாக திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் வெளியேறிவிடும்; முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி

 தேர்தலுக்கு முன்பாக திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் வெளியேறிவிடும்; முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்று வட சென்னை தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

இதில் வட சென்னை தொகுதி பொறுப்பாளரும், மாவட்ட கழகச் செயலாளருமான டி.ஜெயக்குமார், வட சென்னை தொகுதி கழக வேட்பாளர் ராயபுரம் ஆர்.மனோ, மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை முன்வைத்தனர்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியதாவது,

ஆலோசனை கூட்டத்தில், 2026 பொதுத்தேர்தலில்  ஆக்கப்பூர்வமாக எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற கருத்துக்கள் சொல்லப்பட்டன மீண்டும் எம்ஜிஆர் மற்றும் அம்மா  ஆட்சியை கொண்டுவர வேண்டும் என்ற எண்ணத்தில் அறிவுரைகள் வழங்கப்பட்டது.

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட  பல நல்ல‌ திட்டங்களை உதாரணமாக தாலிக்கு தங்கம், மடிக்கணினி போன்ற திட்டங்களை இந்த விடியா திமுக அரசு பதவி ஏற்ற நாளிலிருந்து நிறுத்தி வைத்துள்ளது.

மத்திய அரசு இந்த பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ஒன்றும் செய்யவில்லை திமுக அரசு அதைக் கேட்க தவறிவிட்டது.மத்திய அரசுக்கு ஜால்ரா போடும் வகையில் திமுக செயல்படுகிறது.

நிதி ஆயோக் கூட்டத்திற்கு சென்று முதலமைச்சர் தனது எதிர்ப்பை தெரிவித்திருக்க வேண்டும். அங்கு சென்று தான் புறக்கணித்து இருக்க வேண்டும். மத்திய அரசு ஒரு சார்பு தன்மையாக செயல்படுகிறது என்பதை கூட்டத்தில் பங்கேற்று பதிவு செய்திருக்க வேண்டும்.

 அதிமுக ஆட்சியில் 10 – 15% குற்ற சம்பவங்கள் இருந்தால், திமுக ஆட்சியில் 100% சட்டம் ஒழுங்கு பிரச்சனை இருக்கிறது.

ஜாபர் சாதிக், போஸ், ரசூல், பாபு, மகாலிங்கம் என, திமுகவினர் பலர் போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டு இருக்கிறார்கள்  ஒரே மாதத்தில் தமிழகத்தில் 8 அரசியல் கொலைகள் நடந்துள்ளன.

திமுக ஆட்சியில் அரசியல் படுகொலை, ஆணவ படுகொலைகள் அதிகமாகி விட்டன. உளவு துறையை வைத்துள்ள திமுக அரசுக்கு இவ்வளவு தவறு நடப்பது தெரியாதா? இவற்றையெல்லாம் விசாரிக்க திமுக அரசு தவறி விட்டது. 

இன்னும் ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே இருக்கிறது.அதனால் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் வெளியேறிவிடும். இப்போதே காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இடம் கேட்டும், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி பிடிக்கவும் ஆரம்பித்து விட்டார்கள். அவர்களெல்லாம் கூட்டணியை விட்டு வெளியேற வாய்ப்பு இருக்கிறது.

தேர்தலுக்கு நாள் நெருங்க நெருங்க அந்த கூட்டணியில் விரிசல் ஏற்படுகிறது. திமுக கூட்டணியில் இருந்து பிரிந்தால், அவர்கள்  அதிமுகவுக்கு தான் வருவார்கள்.

இவ்வாறு  முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *