ஓட்டப்பிடாரம் அரசு பள்ளியில் மதிய உணவின் தரத்தை ஆட்சியர் ஆய்வு செய்தார்

மக்களை நாடி அவர்களின் குறைகளை தீர்க்க தமிழ்நாடு அரசின் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
ஓட்டப்பிடாரம் வட்டம் முறம்பன்குளத்தில் நீர்வளத்துறையின் மூலம் ரூ.36 லட்சம் செலவில் நடைபெற்றுவரும் நிரந்தர மறுசீரமைப்புப் பணிகளை ஆட்சியர் லட்சுமிபதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் ஓட்டப்பிடாரம் வ.உ.சி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆட்சியர் .லட்சுமிபதி திடீர் ஆய்வு மேற்கொண்டு, மதிய உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரத்தினை ஆய்வு செய்தார்.
மேலும் உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தில் உள்ள மேசை கணினி மற்றும் அதிநவீன தொலைக்காட்சிப் பெட்டி மூலமாக மாணவர்களுக்கு கற்பிக்கும் முறைகள் குறித்து ஆய்வு செய்து, அதன் பயன்கள் பற்றி மாணவர்களிடம் கேட்டறிந்தார்
தூத்துக்குடி வட்டத்திற்குட்பட்ட காலாங்கரை – அத்திமரப்பட்டி வழியாக செல்லும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கோரம்பள்ளம் ஆற்றின் (உப்பாத்து ஓடை) குறுக்கே நெடுஞ்சாலைத்துறை – நபார்டு மற்றும் கிராம வங்கியின் மூலம் ரூ.14.88 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜெயந்த், மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி, தலைமையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் ம.பிரபு ஆகியோர் உடனிருந்தனர்.
