வேன் உரிமையாளர் வெட்டிக்கொலை; மயானத்தில் பிணமாக கிடந்தார்

கோவில்பட்டி அருகே உள்ள மூப்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிச்சையா மகன் மாடசாமி (வயது 38), சொந்தமாக வேன் வைத்து தனியார் மில்லுக்கு பணியாளர்களை ஒப்பந்தம் அடிப்படையில் அழைத்துச் சென்று வந்தார்.
மாடசாமிக்கு திருமணமாகி மகாதேவி என்ற மனைவியும், மதிவர்ஷன், மகா ஸ்ரீ என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.
நேற்று வெளியே சென்றவர் இரவு வரை வீடு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடினர். இந்நிலையில் மூப்பன்பட்டி கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் மாடசாமியின் இருசக்கர வாகனம் கிடப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாடசாமியின் உறவினர்கள் அங்கு சென்று பார்த்த போது மயானத்தில் எரியூட்டும் இடத்தில் மாடசாமி முகம், கை பகுதியில் அரிவாள் வெட்டுப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்..
இது குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். ஆய்வாளர் சுகாதேவி மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாடசாமியின் கொலைக்கு காரணம் என்ன என்று தெரியவில்லை. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
