கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்ட மக்களை முதல் அமைச்சர் நேரில் சந்திக்காதது ஏன்? டி. ஜெயக்குமார் கேள்வி

கள்ளச்சாராய புழக்கத்தை தடுக்க தவறிய திமுக அரசைக் கண்டித்தும், கள்ளச்சாராய மரணங்களுக்கு பொறுப்பேற்று முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தியும் அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், முன்னாள் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேலும் மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலரும் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியதாவது:-
திமுக அரசு பதவி ஏற்றது முதல் கள்ளசாராயம் மற்றும் போதை வஸ்துக்கள் தமிழகத்தில் சர்வ சாதாரணமாக நடமாடுகிறது.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளசாராயம் குடித்து 60 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 150-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பலர் தங்களது கண்பார்வையை இழந்துள்ளனர்.
கடந்த முறை கள்ளச்சாராய மரணங்கள் ஏற்பட்டபோது “இரும்புக்கரம் கொண்டு அடக்குவேன்” என வாய்சவடால் விட்ட முதல்வர் தற்போது வரை கள்ளக்குறிச்சி சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்காதது ஏன்..?
திமுக அரசின் அலட்சியத்தால் 60-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் போதுமான மருந்துகள் இல்லை என கூறிய பிறகு தான் மும்பைக்கு சென்று மருந்துகளை வாங்கி 2026ல் ஸ்டாலினை மக்கள் நிரந்தரமாக சஸ்பெண்ட் செய்து விடுவார்கள்.
இவர்களுக்கு மடியில் கனமில்லை என்றால் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றலாமே.சிபிஐ க்கு மாற்றினால் ஆளும் கட்சியினர் பலர் மாட்டுவார்கள். மேலும் ஒரு நபர் ஆணையம் என்பது வெறும் கண் துடைப்புக்காக அமைக்கப்பட்டுள்ளது.
சிபிஐ விசாரித்தால் மட்டுமே பல உண்மைகள் வெளிவரும். எனவே இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க கோரி நீதிமன்றம் சென்றுள்ளோம். நல்ல முடிவு வரும் என்ற நம்பிக்கை உள்ளது
மக்கள் பிரச்சனையை சட்டசபையில் தான் விவாதிக்க முடியும். 60க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ள நிலையில் இதைப் பற்றி விவாதிக்க சட்டமன்றத்தில் அனுமதி மறுக்கப்படுகிறது. ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்கும் வகையில் தான் இன்று சட்டமன்றம் உள்ளது. சட்டமன்றத்தில்தான் இத்தகைய பிரச்சினை என்றால் ஆர்ப்பாட்டம் நடத்துவதிலும் காவல்துறையினர் மூலம் அனுமதி மறுக்கிறார்கள்.
இவ்வாறு டி. ஜெயக்குமார் கூறினார்.
