கோவில்பட்டியில் தொடர் போராட்டங்கள்; கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம்

கோவில்பட்டி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் ஒய். எம். சி. ஏ. தலைவர் ஆம்ஸ்ட்ராங் தலைமையில் நடைபெற்றது. கூட்டமைப்பு செயலாளர் வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்கிளின் முன்னிலை வகித்தார்.
கூட்டமைப்பின் செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்த ஆலோசனையை முன்வைத்து தலைவர் தமிழரசன் உரையாற்றினார்.
கூட்டத்தில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, நாம் தமிழர் கட்சி ரவிகுமார், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அபிராமி முருகன், மக்கள் நீதி மய்யம் கட்சி ராதாகிருஷ்ணன், பகத்சிங் ரத்ததான கழக காளிதாஸ், தமிழ்நாடு காமராஜர் பேரவை நாஞ்சில்குமார், தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு மேரிசீலா, இரட்டைமலை சீனிவாசனார் இயக்கம் செல்வகுமார், மக்கள் நலம் அறக்கட்டளை மாரிமுத்துகுமார், ஜெகநாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாடசாமி, வழக்கறிஞர் முத்துக்குமார், அழகுதுரை , தோணுகால் மகாதேவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக கோவில்பட்டியில் தொடர் போராட்டங்கள் நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்பட்டது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு :-
*தமிழகத்தில் அதிகரித்து வரும் போதை கலாச்சாரத்திற்கு எதிராக 26/06/24 அன்று கோவில்பட்டியில் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகிப்பது.
*ரெயில்வே துறையில் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட மூத்த குடிமக்களுக்கான சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும்.
*வந்தேபாரத் உள்ளிட்ட கோவில்பட்டி வழியாக செல்லக்கூடிய அனைத்து ரெயில்களும் கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நின்று செல்லவேண்டும் என்று வலியுறுத்தி 28/06/24 அன்று கோவில்பட்டி ரெயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது.
*மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட மாஞ்சோலை தோட்டத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும்.
* கோவில்பட்டியில் விபத்துக்களை ஏற்படுத்தும் சாலையில் திரியும் மாடுகள் மற்றும் நாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரி 2/7/24 அன்று கோவில்பட்டி நகராட்சியில் மனு கொடுப்பது.
*கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையிலிருந்து புதுரோடு வழியாக ரெயில் நிலையம் வரை மின் விளக்குகள் இன்றி இருள் மயமாக இருப்பதை கண்டித்து 4/7/24 அன்று மாலை “டார்ச்லைட்”போராட்டம் நடத்துவது
2024 ஜூலை 7ல் இரட்டை மலை சீனிவாசனார் பிறந்த தினத்தையும் ஜூலை 15ல் காமராஜர் பிறந்த தினத்தையும் சிறப்பாக கொண்டாடுவது என தீர்மானிக்கப்பட்டது.
