கோள்கள் திருவிழா நிறைவு நாளில் 5 ஆயிரம் இடங்களில் ‘அண்டத்தை அறிவோம் நிகழ்ச்சி’ அறிவிப்பு



தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி சார்பில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் வானியல் கருத்துக்களை பரப்பிட பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.
இதில் ஒரு பகுதியாக ஆயிரம் இடங்களில் அஸ்ட்ரானமி என்னும் தலைப்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வானியல் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.
2024ம் ஆண்டில் 2024 இடங்களில் கோள்கள் திருவிழாவை ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை நடத்த திட்டமிடப்பட்டு 2308 இடங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி சார்பில் கோள்கள் திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி கோவை ஜான்சன் தொழில்நுட்பக் கல்லூரியில் நடந்தது.
விழாவில் தொலைநோக்கிகளின் அணிவகுப்பு நடத்தப்பட்டது.தஞ்சாவூர் மாவட்ட அஸ்ட்ரோ கிளப்புக்கு டெலஸ்கோப் வழங்கப்பட்டது. அறிவியல் பலகையின் தொகுப்பு நூல், விண் கற்கள் தின துண்டு பிரசுரங்கள் வெளியிடப்பட்டு 5000 இடங்களில் அண்டத்தை அறிவோம் நிகழ்ச்சி அறிவிக்கப்பட்டது.
நிறைவு விழாவிற்கு தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி மாநில தலைவர் ஜி.ரமேஷ் தலைமை தாங்கினார்.
ஜான்சன் தொழில்நுட்பக் கல்லூரியின் இயக்குனர் சுரேஷ்குமார்,கோவை அஸ்ட்ரோ கிளப் நிறுவனர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோவை அஸ்ட்ரோ கிளப் செயலாளர் சாய் லட்சுமி அனைவரையும் வரவேற்றார்.
தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி நிர்வாகிகள் மனோகர்,சாந்திஆகியோர் கோள்கள் திருவிழாவின் சாதனைகளும் சவால்களும் குறித்து பேசி அடுத்த கட்டமாக தமிழகம் முழுவதும் 5000 இடங்களில் அண்டத்தை அறிவோம் நிகழ்ச்சி நடத்திட அறிவிப்பு செய்தனர்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலைய முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை,தமிழ்நாடு மாதிரி பள்ளி சொசைட்டியின் உறுப்பினர் செயலர் சுதன் ஆகியோர் இணைய வழியில் கோள்கள் திருவிழா குறித்து சிறப்புரையாற்றினர்.
மொஹாலிஇந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதுநிலை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன்,இஸ்ரோ விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் முதுநிலை விஞ்ஞானி ராஜசேகர், இஸ்ரோ முன்னாள் துணை இயக்குனர் இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டு அறிவியல் பலகையின் தொகுப்பு நூலை வெளியிட்டும், கோள்கள் திருவிழாவை சிறப்பாக நடத்திய வானியல் மன்றங்களுக்கு பரிசுகள் வழங்கியும் பேசினர்.
மாதிரி பள்ளிகளின் ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ், டாஸ் ஒருங்கிணைப்பாளர் சிந்தியா,உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வானியல் மன்றத்தினர், அஸ்ட்ரானமி வள பயிற்றுநர்கள்,பள்ளி மாணவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.முடிவில் டாஸ் ஒருங்கிணைப்பாளர் மேகலா நன்றி கூறினார்.
