திருச்செந்தூர் கடற்கரையில் 20 அடி தூரத்துக்கு தண்ணீர் உள்வாங்கி பாறைகள் வெளியே தெரிந்தன

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பவுர்ணமி தினத்தையொட்டி இன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது.
4.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடந்தது.
பவுர்ணமி தினத்தையொட்டி இன்று அதிகாலையில் இருந்தே ஆயிரக்கணக்கானோர் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர்.
திருச்செந்தூர் கடற்கரை மற்றும் நாழிக்கிணறில் பக்தர்கள் புனித நீராடி சுவாமிதரிசனம் செய்தனர்,
.இந்த சமயத்தில் இன்று பிற்பகல் திருச்செந்தூர் கடல் திடீரென உள்வாங்கியது. சுமார் 20 அடி தூரத்திற்கு தண்ணீர் உள்வாங்கியது. இதனால் அங்கிருந்த பாறைகள் வெளியே தெரிந்தது.
அப்போது கடற்கரையில் திரண்டிருந்த பொதுமக்கள் பாறைகளின் மீது ஏறி செல்பி எடுத்தனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் பாதுகாப்பு கருதி அங்கிருந்து செல்ல பொதுமக்களை அறிவுறுத்தினர்.
இன்று குபேர பவுர்ணமி ஆகும். இதனால் இன்று மாலையில் இருந்து நாளை அதிகாலை வரை லட்சக்கணக்கானோர் நிலா வெளிச்சத்தில் கோவில் பகுதியில் தங்கி இருப்பர். இதையொட்டி திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ் தலைமையில் 9 காவல் ஆய்வாளர்கள், 26 உதவி ஆய்வாளர்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்துள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் இன்று பார்வையிட்டார்.
