நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தில் வடம் அறுந்த விவகாரம்: சட்டசபையில் அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆனி திருவிழா தேரோட்டம் நேற்று நடைபெற்றது. தேரோட்டத்தின் போது பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து செல்லும் போது சுவாமி வலம் வந்த தேரின் வடம் 4 தடவை அறுந்தது.
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது இதுபற்றி பேசிய அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது:-
நெல்லையப்பர் கோவில் தேர் 28-28 அகலம் மற்றும் 80 அடி உயரம் கொண்ட தேர். நேற்று தேர்வடத்தை நெம்புகோல் தருவதற்கு முன்னதாக பக்தர்கள் பக்தி பரவசத்தில் ஒரே நேரத்தில் இழுத்ததன் காரணமாகவே தேர்வடம் அருந்தது.
மாறாக திருச்செந்தூரில் தேர்வடம் தயாராக இருந்த நிலையில் அதனை இணைத்து 9:30 மணியளவில் வெற்றிகரமாக 5 சுவாமிகள் ஊர்வலம் எடுத்துச்செல்லப்பட்டது.
மேலும், அனைத்து தேர்களுக்கும் இணைப்பு பகுதியில் இணைப்புச் சங்கிலி இருக்கும். நெல்லையப்பர் தேர் 450 டன் கொண்ட தேர். அதற்கான வடம் கயிறால் கட்டினால் தான் இழுக்க முடியும். அதுமட்டுமின்றி அதிக எடை கொண்ட தேருக்கு கயிறினால் தான் வடம் அமைக்கப்படும். இவ்வாறு அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார்.
