கோவில்பட்டி நீதிமன்றம் முன்பு யோகா நிகழ்ச்சி

சர்வதேச யோகா தினத்தை ஒட்டி கோவில்பட்டி சார்பு நீதிமன்றம் முன்பு இன்று காலை 7 மணிக்கு யோகாசனம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. சார்பு நீதிமன்ற நீதிபதி டி. மாரிக்காளை, மாவட்ட உரிமையியல் நீதிபதி சி. கருப்பசாமி, குற்றவியல் நடுவர் நீதிபதிகள் எம்.கடற்கரை செல்வம், பி. பீட்டர், விரைவு நீதிமன்ற நீதிபதி பாஸ்கர் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு யோகாசனம் செய்தனர்.
கோவில்பட்டி வ.உ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விவேகானந்தா கேந்திர யோகா குழு சார்பில் யோகா பயிற்சி வழங்கப்பட்டது.

]
இதில் கேந்திர பயிற்சியாளர்கள் பரமகுரு, வேலுச்சாமி ஆகியோர் யோகா பயிற்சி வழங்கினர். இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு யோகாசனங்கள் செய்தனர்.

கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் யோகா பயிற்சியாளர் குணா கலந்து கொண்டு மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு யோகா பயிற்சி வழங்கினார். மேலும் யோகாசனங்கள் செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கினார்.
பள்ளி முதல்வர் பிரபு அனைவரையும் வரவேற்றார். யோகா நிபுணர் கவிதா கிருஷ்ணன், யோகா பயிற்றுநர் ராஜேஷ்வரி ஆகியோர் கலந்துகொண்டு யோகா மற்றும் தியானம் பற்றிய விழிப்புணர்வினையும், யோகா மற்றும் தியானம் ஏன் செய்ய வேண்டும்? அதனால் கிடைக்கக்கூடிய பயன்கள் என்னென்ன? மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எவ்வளவு முக்கியமானதாக திகழ்ந்து வருகிறது என்பதனை எடுத்துரைத்தனர்.
பள்ளி மாணவ மாணவிகள் பல்வேறு விதமான யோகாசனங்களை செய்து காண்பித்தனர். ஆசிரியர் கீதாராணி நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.
யோகா ஆசிரியர் உமாசங்கரி, உடற்கல்வி ஆசிரியர் லட்சுமண பிரபு ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஆசிரியர் ராஜா நன்றி கூறினார்.
நேஷனல் பொறியியல் கல்லூரியில் தேசிய மாணவர் படை சார்பில் நடந்த விழாவில், கோவில்பட்டி மன வள கலை மன்ற யோகா பயிற்சியாளர் பேராசிரியர் எ.சரமாரிராஜ், கல்லூரி யோகா கிளப் ஒருங்கிணைப்பாளரும், மின்னணு தொடர்பு பொறியியல் துறைத் தலைவர் பேராசிரியருமான எஸ். தமிழ்செல்வி ஆகியோர் யோகா பயிற்சி அளித்தனர்.
கோவில்பட்டி சொர்ணமலை கதிரேசன் கோவில் மலை மீது சர்வதேச யோகா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
குருவிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ்., திட்ட முன்னாள் அலுவலர், நல்லாசிரியர் ரெ.சுப்பா ராஜு யோகாசன விழிப்புணர்வு பயிற்சி நடத்தினார்.நாகலாபுரம் சாமி அய்யா நாடார் மேல் நிலைப்பள்ளி வேளாண் அறிவியல் கல்வி முன்னாள் ஆசிரியர் கோ. சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டு யோகா பயிற்சி மேற்கொண்டனர்.
