பூட்டிய வீட்டின் கதவை உடைத்து நகைகள் திருட்டு

கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின் புதூர் சக்கரத்தாழ்வார் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். என்ஜீனியரான இவர் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி டென்னிஸ் ராணி.
இவர்களின் மகள் சரிகா லெட்சுமி கோவையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். மகன் வினய் குமார் ராசிபுரத்தில் ஒரு தனியார் பள்ளியில் 12 ம் வகுப்பு படித்து வருகிறார்.
கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறந்ததால் தனது மகனை பள்ளியில் விடுவதற்காக டென்னிஸ் ராணி ராசிபுரம் சென்றுள்ளார்.
வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அவர்களுடைய வீடு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அருகில் இருந்தவர்கள் டென்னிஸ் ராணி மற்றும் நாலாட்டின்புதூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த தங்க நகைகள் காணாமல் போய் இருப்பது தெரியவந்துள்ளது.
டென்னிஸ் ராணி வந்த பிறகு தான் காணாமல் போன நகைகள் மற்றும் பொருட்கள் குறித்த விவரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர் மேலும் திருட்டில் ஈடுபட்டவர் பற்றி துப்பு துலக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
