கொடைக்கானலில் மலர் கண்காட்சி

மலைகளின் இளவரசி என்று வர்ணிக்கப்படும் கொடைக்கானலில் கோடை விழாவை யொட்டி சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் 61வது மலர்கண்காட்சி இன்று காலை தொடங்கியது.
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சியை வேளாண்மை உற்பத்தி ஆணையர், அரசு முதன்மைச் செயலாளர்- ஆபூர்வா திறந்து வைத்து பார்வையிட்டார். கண்காட்சியை யொட்டி சில மாதங்களுக்கு முன்பு 3 கட்டமாக ஊட்டி, பெங்களூரு, கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட முக்கிய பெருநகரங்களில் சுமார் 2½ லட்சம் மலர் நாற்றுகள் வரவழைக்கப்பட்டு நடவு செய்யப்பட்டது.

அந்த நாற்றுகள் தற்போது பூக்கள் பூக்கத் தொடங்கி உள்ளன. சால்வியா,பாப்பி, டெல்பினியம், ஆஸ்டர், மேரி கோல்டு, பேன்சி வகைகள், பெட்டுன்னியா, குட்டை ரக சால்வியா, கேலண்டுல்லா, பிளாக்ஸ், டேலியா மற்றும் ரோஜா உள்ளிட்ட பூக்கள் மலர் படுகைகளில் பூத்துக் குலுங்கும் காட்சி கவர்ந்து வருகிறது.
