கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தல திருவிழா நிறைவு
கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தலத்தின் திருவிழாவின் நிறைவு நாள் விழா நேற்று நடைபெற்றது. காலை 7மணிக்கு திருத்தலவளாகத்தில் அமைந்துள்ள திருப்பலி பீடத்தில் மேல இலந்தைகுளம் பங்குதந்தை ஜெயபாலன்,கோவில்பட்டி உதவிபங்குதந்தை அந்தோணிராஜ், காமநாயக்கன்பட்டி உதவி பங்குத்தந்தை செல்வின் இணைந்து திருவிழா திருப்பலி நிறைவேற்றி 15 பேருக்கு புது நன்மை வழங்கினார்கள். மாலை 6.30 மணியளவில் ஜான் போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் திருச்சி இறையியல் கல்லூரி பேராசிரியர் அந்தோணிராஜ், கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தல உதவி பங்குதந்தை அந்தோணிராஜ் இணைந்து திருப்பலி நிறைவேற்றினார்கள்,
பின்னர் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் நற்கருணை வைக்கப்பட்டு காலையில் புது நன்மை வாங்கியவர்கள் வெண்ணிற ஆடை அணிந்து மலர்கள் தூவிய வண்ணம் பவனியில் முன் செல்ல,இறைமக்கள் ஜெபம் செய்தவாறு புதுரோடு,சாத்தூர் ரோடு வழியாக திருத்தலம் வந்து சேர்ந்தனர்.திருத்தலத்தில் நற்கருணை ஆசிர்வாதம் நடைபெற்று,கொடி இறக்கத்துடன் திருவிழா இனிதே நிறைவு பெற்றது. இதில் பங்கேற்ற அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.