• June 7, 2025

நடிகர் அஜித் அரசியலுக்கு வந்தால் நாங்கள் வரவேற்போம் -டி. ஜெயக்குமார் சொல்கிறார் 

 நடிகர் அஜித் அரசியலுக்கு வந்தால் நாங்கள் வரவேற்போம் -டி. ஜெயக்குமார் சொல்கிறார் 

சென்னை திரு.வி.க நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட  பல்வேறு பகுதிகளில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தல்களை முன்னாள் அமைச்சர் 

டி. ஜெயக்குமார் இன்று திறந்துவைத்தார்.

அப்போது பொது மக்களுக்கு மோர், பழங்கள், குளிர் பானங்கள் உள்ளிட்டவை வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,

.முதலாளிகளின் சுரண்டலை எதிர்த்து சிகாகோ நகரத்தில் நடந்த புரட்சியில், தொழிலாளர்கள் ரத்தம் சிந்தி வெற்றி பெற்ற தினம் மே தினம். தியாகத்தால் உருவான தினம் தான் தொழிலாளர் தினம்.

இந்தியாவில் சிந்தனை சிற்பி சிங்கார வேலர் தான் முதன் முதலில் தொழிலாளர் தினத்தை கொண்டாடினார். அவருக்கு எங்களது வீரவணக்கம்.

அதிமுக தொழிலாளர்களின் உற்ற தோழனாக இருந்து வருகிறது. ஆனால் திமுக தொழிலாளர் விரோதப் போக்கை கடைபிடிக்கின்றது.தேர்தல் காலத்தில் தொழிலாளர் வர்க்கத்திற்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. போக்குவரத்து தொழிலாளர்கள் ஓய்வு பெற்றும் அதன் பலன்களை அணுபவிக்க முடியவில்லை. அவர்களுக்கான நிலுவைத் தொகையை கொடுக்கவில்லை. இந்த ஆட்சியில் தொழிலாளர்கள் தட்டேந்தி பிச்சை கேட்டு போராடும் நிலைமையில் உள்ளனர்.தொழிலாளர் தினத்தை கொண்டாடக்கூடிய தகுதி படைத்த ஒரே இயக்கம் அதிமுக தான்.

தொழிலாளர் தினத்தில் பிறந்த சகோதரர் அஜித்குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அஜித்துக்கு எப்போதும் ஒரு சிறப்பான நன்றியை நான் சொல்வேன்.அவர் ஒரு தைரியசாலி.கோழைகளை எனக்கு பிடிக்காது.தைரியசாலியை தான் பிடிக்கும். எதையும் எதிர்கொள்ளும், எந்த சூழ்நிலையையும் எதிர்கொண்டு தன் கருத்துக்களை தைரியமாக எடுத்து வைக்கும் என் அலைவரிசையில் உள்ளார் என்பது எனக்கு சந்தோஷம்.

திரைப்பட தயாரிப்பாளர்களை முழுங்கி சாப்பிடுகிறது ரெட் ஜெயிண்ட் மூவிஸ். விஷால் படத்தை வெளியிட முடியாமல் எந்த அளவிற்கு கஷ்டப்படுகிறார் என்பது தெரியும். பெரிய திமிங்கலமாக இருக்கும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் பட தயாரிப்பாளர்களை நசுக்கி, யாரும் படத்தை ரிலீஸ் செய்ய முடியாத நிலையை உருவாக்கியுள்ளது.

கருணாநிதி ஆட்சிக் காலத்தில் கருணாநிதிக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவிற்கு திரைப்படத் துறையினர் கட்டாயமாக அழைக்கப்பட்டனர். அதில் கலந்து கொள்ளவில்லை என்றால் படம் வெளியாகாது என பல நெருக்கடிகள் இருந்தது. அனைவரும் பயந்தனர். ஆனால் நடிகர் அஜித் நேரடியாக சென்று மேடையில் அழைத்து வரப்படவில்லை, இழுத்து வரப்பட்டேன் என கூறினார். அதை போற்றுகின்ற வகையில் தான் வாழ்த்து கூறினேன். விடாமுயற்சியுடன் வெற்றி பெறுவதற்கு என்னுடைய நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

குடிநீர் பிரச்சனையை தீர்க்க முற்போக்கான திட்டங்கள் எதுவும் இந்த ஆட்சியில் செய்யவில்லை.குடிக்கவும், விவசாயத்திற்கும் தண்ணீர் கிடையாது. ஒரு முதலமைச்சர் கோட்டையில் இருந்துகொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவரின் கடமை. ரோம் நகரம் தீ பிடித்து எறிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்தது போல், முதல்வர் கொடைக்கானலில் கோல்ப் விளையாடுகிறார்.சட்டம் ஒழுங்கு சரியில்லை. 48 மணி நேரத்தில் பத்து கொலைகள். கஞ்சா,அபின் போன்ற போதைப்பொருட்கள் சர்வசாதாரணமாக 

கிடைக்கிறது.அதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.

கூட்டணிக்காக கர்நாடகா செல்லும் முதல்வருக்கு,காவிரி தண்ணீரை பெற்று தர வழி தெரியவில்லை.

இப்போது உச்சநீதி மன்றம் செல்வது காலம் தாழ்த்திய செயல். முன்பே சென்றிருக்க வேண்டும். 

நம் உரிமைகள் மறுக்கப்படும் போது உரிய நேரத்தில் உச்சநீதி மன்றம் சென்றோம்.நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போட திமுகவிற்கு தைரியம் உண்டா?.

பாடத்திட்டத்தில் வரலாற்றில் இடம் பிடித்தவர்கள் தான் இருப்பார்கள். கருணாநிதி வரலாற்றில் இடம் பிடித்தவரா?. ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி கருணாநிதி ஆட்சி.இப்படி பட்டவரின் வரலாறு பாடத்திட்டத்தில் வர வேண்டுமா?

பல்வேறு பகுதிகளில் சிசிடிவி கேமரா பிரச்சனை வருகிறது. இது தேர்தல் ஆணையத்திற்கு போதாத காலம். 

எனது இல்லத்தில் கூட 26 சிசிடிவி கேமராக்கள் உள்ளன. ஒரு நாள் கூட செயலிழந்தது கிடையாது. ஆனால் வாக்கு பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் உள்ள  சிசிடிவி கேமராக்கள் மட்டுமே செயலிழக்க காரணம் என்ன?.மாற்றி மாற்றி வாக்குப் பதிவு சதவீதத்தை சொல்வது தேர்தல் ஆணையத்தின் குளறுபடிதான். உள்ளதை உள்ளபடி சொல்ல வேண்டும். மாற்றி மாற்றி கூறினால் அது குழப்பத்தை ஏற்படுத்தும்.

பாஜகவை பொறுத்தவரை சொல்வது ஒன்று, செய்வது ஒன்று. உத்தமர் காந்தி போன்று பேசுவார்கள் ஆனால் தேர்தல் பத்திரத்தில் 16000 கோடி எப்படி வந்தது?

சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின்படி சென்னையில் கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.அந்த 500 கோடி ரூபாய் பிரதான சாலைகள் மற்றும் உட்புற சாலைகள் அமைப்பதற்கு வழங்கப்பட்டதாகும்.அதில் பல்வேறு தரப்பிற்கு பணம் கொடுக்கப்படுகிறது.

இந்த சாலைகள் அமைக்கப்படுவதை கண்காணிக்க குழு அமைக்கப்படும். 

ஆனால் முறையான ஆய்வுகள் ஏதும் நடத்தப்படாமல், அண்ணா பல்கலைக்கழகத்தில் இருக்கும் ஏதோ ஒரு பேராசிரியரின் கையெழுத்து பெற்ற ஒரு சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அப்படி எதுவும் கொடுக்கவில்லை என்று அண்ணா பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது. இது மோசடி.

500 கோடி ரூபாய் மதிப்பிற்கு முறைகேடு நடத்தப்பட்டுள்ளது என்று சமூக வலைத்தளத்தில் வருகிறது.

இவ்வாறு டி. ஜெயக்குமார் கூறினார் 

அவரிடம், “நடிகர் அஜித் அரசியலுக்கு வந்தால், அதை விரும்புகிறீர்களா “என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

இதற்கு டி. ஜெயக்குமார் பதில் அளிக்கையில் “நல்லது செய்ய அரசியல் ஒரு களம். அப்படி அஜித் வந்தால் நாங்கள் வரவேற்போம் “என்று தெரிவித்தார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *