தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம் தொடங்கியது
சீனாவில் இருந்து திருட்டுத்தனமாக இந்தியாவுக்கு கொண்டு வந்து விற்கப்படும் பிளாஸ்டிக் லைட்டர்களினால் தீப்பெட்டி தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது.
.ஒரு சிகரெட் லைட்டர் விற்பனை 20 தீப்பெட்டி விற்பனையை தடை செய்து வருவதாக கூறப்படுகிறது. எனவே பிளாஸ்டிக் லைட்டர்களை தடை செய்ய வேண்டும் மத்திய, மாநில அரசுகளுக்கு கடந்த சில ஆண்டுகளாக தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையெடுத்து கடந்த ஆண்டு ரூ.20க்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் லைட்டர்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இருந்த போதிலும் சீனாவில் இருந்து நேபாளம் வழியாக இந்தியாவிற்கு பிளாஸ்டிக் லைட்டர்கள் திருட்டுத்தனமாக கொண்டு வரப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது.
ரூ.8 முதல் 10 வரை பிளாஸ்டிக் லைட்டர்கள் விற்பனை செய்யப்படும் நிலை இருப்பதால் தீப்பெட்டி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பலகோடி ரூபாய் மதிப்புள்ள தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம் அடைந்துள்ளன.
இந்நிலையில் ஏற்கனவே கோவில்பட்டி நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம், அறிவித்தபடி இன்று (13-ந் தேதி) முதல் வரும் 22ந் தேதி வரை தீப்பெட்டி ஆலைகளில் தீப்பெட்டி உற்பத்தியை நிறுத்துவது என்று தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம் தொடங்கியது.
கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், தூத்த்துகுடி, நெல்லை போன்ற ஊர்களில் உள்ள தீப்பெட்டி ஆலைகள் மூடப்பட்டுள்ளன, பகுதி மற்றும் முழு இயந்திரம் என சுமார் 700 தீப்பெட்டி ஆலைகள் மூடப்படுவது மட்டுமின்றி, 4 லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பினை இழக்கும் நிலை உருவாகி உள்ளது.
இதனால் நாள் ஒன்றுக்கு 6 கோடி ரூபாய் அளவுக்கு தீப்பெட்டி உற்பத்தி பாதிக்கப்படும் நிலை உள்ளது