தூத்துக்குடி தொகுதி தி.மு.க.-அ.தி.மு.க.வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெற உள்ளது, இந்த தொகுதியில் திமுக அதிமுக பாஜக கூட்டணி வேட்பாளர்கள் மற்றும் தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி ஏற்பட்டு உள்ளது.
நான்கு வேட்பாளர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று திமுக வேட்பாளர் கனிமொழி திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மணப்பாடு ஊராட்சியில் பொதுமக்களிடம் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். பிரசாரத்தில் கனிமொழி பேசியதாவது::-
இந்தப் பகுதியில் வரக்கூடிய மணல் திட்டுகளைத் தொடர்ந்து எடுத்துக் கொண்டிருக்கிறோம். ரூ. 42 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவுகள் பணிகள் அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் நடைபெற்றுக் கொள்கிறது. சேதமடைந்த படகுகளுக்கு முதலமைச்சர் ரூ. 22,500 நிவாரணம் வழங்கினார். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ஒரு கோடி 15 லட்சம் மகளிர்க்கு வழங்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது. விடுபட்டவர்களுக்குத் தேர்தல் முடிந்த பிறகு முகாம் அமைத்து வழங்கப்படும்.
இவ்வாறு கனிமொழி பேசினார்.
கோவில்பட்டியில் அதிமுக வேட்பாளர்
தூத்துக்குடி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி நேற்று கோவில்பட்டி பகுதியில் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். திறந்த வேனில் சென்ற அவருடன் கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ உடன் இருந்தார்.
நேற்று காலை முதல் பிற்பகல் வரை கோவில்பட்டி சட்டசபை தொகுதியில் அடங்கிய ராஜபுதுக்குடி, காமநாயக்கன்பட்டி, பாரதி நகர் பகுதியில் வாக்கு சேகரித்தார். மாலையில் கோவில்பட்டி நகராட்சி 36 வார்டுகள், வீரவாஞ்சி நகர், ஆர்த்தி மகால் அருகில், காந்தி நகர், காமராஜர் சிலை அருகில், செவக்காடு தேவர் சிலை அருகில், ஜோதி நகர், கடலையூர் ரோடு, வள்ளுவர் நகர் பகுதிகளில் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.
இதே போல் பாஜக கூட்டணியில் போட்டியிடும் தமாகா வேட்பாளர் விஜயசீலன் சைக்கிள் சின்னத்துக்கும் , நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரொவினா ரூத் ஜேன் ஒலிபெருக்கி சின்னத்துக்கும் வாக்கு சேகரித்தனர்,
இவர்கள் திறந்த வேனில் சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.