தீப்பெட்டி தொழிலாளர்கள், மீனவர்கள் வாழ்வாதாரம் உயர பாடுபடுவேன். ; தூத்துக்குடி அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி உறுதி
மக்களவை பொதுத் தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது.
இதில் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி வேட்பு மனு ஏற்கப்பட்ட பின்பு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-‘
தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி, அவரது கணவர், மற்றும் மகன் ஆகியோர் வெளிநாட்டு குடியுரிமை பெற்றுள்ளனர்.
மேலும் அவரது மகன் வங்கி கணக்கில் பான் கார்டு இல்லாமல் 15 லட்ச ரூபாய் உள்ளது. இதுகுறித்து நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். மேலும் திமுக வேட்பாளர் மீதான 2 ஜி வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.
எனவே அவரது வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவித்தோம். அதிமுகவுக்கு மக்களின் ஆதரவு எங்களுக்கு நன்றாக உள்ளது. போகும் இடங்களில் எல்லாம் கண்கூடாக தெரிகிறது.
எனவே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். நான் வெற்றி பெற்றால் தூத்துக்குடி மாவட்ட மக்கள் மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படாத வகையில் கோரம்பள்ளம் குளக்கரை பலப்படுத்தப்படும் மேலும் தாமிரபரணி ஆற்றுப் படுகையில் கரைகள் உடைப்பு ஏற்படாத அளவுக்கு பலப்படுத்தப்படும். மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிலாளர்கள் தீப்பெட்டி தொழிலாளர்கள் மீனவர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களின் வாழ்வாதாரம் உயர பாடுபடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.