அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும்; டி.ஜெயக்குமார் வலியுறுத்தல்
நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழ்நாடு தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹூ ஆலோசனை நடத்தினார்.
. சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் சார்பில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அதிமுக சார்பில் அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் மற்றும் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியதாவது:-
நாடாளுமன்ற தேர்தலும், விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தலும் நியாயமான முறையிலும், ஜனநாயக முறையிலும், நேர்மையாக நடைபெற தேர்தல் ஆணையம் முழுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்
குறிப்பாக 85 வயதுக்கு மேல் உள்ள வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு வழங்க வேண்டிய 12 டி விண்ணப்பத்தை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நேரடியாக வாக்காளர்களிடம் கொண்டு சென்று விநியோகிக்க வேண்டும்.
அவர்களின் பட்டியலை அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் கொடுக்க வேண்டும்
தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நடுநிலையோடு செயல்பட வேண்டும் நடுநிலையோடு செயல்படாத அதிகாரிகள் மீது துறைரீதியான கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறோம்,
மின்னணு பண பரிமாற்றத்தை முழுமையாக கண்காணிக்க வேண்டும் அதிலும் அதிகளவிலான பண பரிமாற்றத்தை கண்காணிப்பது அவசியம், வாகனங்களை சோதனையிடும் தேர்தல் பறக்கும் படையினர், அரசு வாகனங்களையும் முழுமையாக கண்காணிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தினோம்..
கடும் வெயிலில் வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை வாக்குச்சாவடிகளில் ஏற்படுத்தி தர வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளையும் வலியுறுத்தி உள்ளோம்/
இவ்வாறு டி.ஜெயக்குமார் கூறினார்.