சிந்தலக்கரையில் 26-ந்தேதி மு.க.ஸ்டாலின் பேசுகிறார் ; தேர்தல் பிரசார கூட்ட இடத்தை கனிமொழி ஆய்வு
தமிழகத்தில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதிக்கான நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் 19-ம் தேதி நடைபெறுகிறது.
திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் ‘இண்டியா ’ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிக்கும் பணியை இன்று தொடங்குகிறார். வருகிற 26-ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகில் உள்ள சிந்தலக்கரையில் நடைபெறும் திமுக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்கவுள்ளார்..
அதனை முன்னிட்டு, இன்று (22/03/2024) சிந்தலக்கரையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் தேர்தல் பிரச்சார கூட்டம் நடக்கும் இடத்தை திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான பெ.கீதா ஜீவன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.