தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள்

நடைபெற இருக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜக மற்றும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முயற்சி மேற்கொண்ட தேமுதிக இன்றும் நாளையும் (19,20) நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து மனுக்கள் பெறத்தொடங்கி இருக்கிறது.
அதிமுகவுடன் இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடத்தி இருக்கும் தேமுதிக, தொகுதி உடன்பாடு ஏற்படாத நிலையில் விருப்ப மனுக்களை பெறத் தொடங்கி உள்ளது.
சென்னை கோயம்பேடு கட்சியின் தலைமை அலுவலகத்தில் மனுக்கள் விநியோகம் நடக்கிறது. பொது தொகுதியில் போட்டியிட ரூ.15 ஆயிரம், தனி தொகுதியில் போட்டியிட ரூ.10 ஆயிரம் செலுத்தி விருப்ப மனுக்கள் பெற்று அதனை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.
தமிழ்நாடு, புதுச்சேரியில் மொத்தம் 40 தொகுதிகளுக்கும் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு நேர்காணல் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.
விருப்ப மனுக்களை கட்சியின் பொதுசெயலாளர் பிரேமலதா பெற்றார். பொருளாளர் சுதீஷ் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டணி குறித்து பிரேமலதா கூறுகையில், இன்னும் 2 நாட்களில் யாருடன் கூட்டணி, எத்தனை தொகுதிகளில் போட்டி, வேட்பாளர்கள் விவரம் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படும்” என்று தெரிவித்தார்.
