கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் பயணச்சீட்டு கொடுக்கும் இடத்தில் தமிழ் தெரிந்தவர்களை பணியமர்த்த கோரி மனு
கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் பயணச்சீட்டு கொடுக்கும் அறையில் தமிழ் தெரிந்த பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
கோவில்பட்டி ரெயில் நிலையத்திற்கு வந்த மதுரை கோட்ட முதன்மை பொறியாளர் கார்த்திக்கை கூட்டமைப்பின் தலைவர் க.தமிழரசன் தலைமையிலான குழுவினர் சந்தித்து மனு கொடுத்தனர்,
கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் செ.ராஜு, நாம் தமிழர் கட்சி ரவிகுமார், கூட்டமைப்பின் பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, மக்கள் நீதி மய்யம் கட்சி ராதாகிருஷ்ணன், ஐ.என்.டி.,யு,.சி, ராஜசேகரன், வழக்கறிஞர் முத்துக்குமார் ஆகியோரும் உடன் சென்று இருந்தனர்,
அவர்கள் கொடுத்த மனுவில் கூறபட்டு இருந்ததாவது:-
தென்னக ரெயில்வேயில் மதுரை கோட்டத்தில் அதிகமான வருமானம் ஈட்டித்தருவது கோவில்பட்டிரெயில் நிலையமாகும். தூத்துக்குடி, விருதுநகர் திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளில் இருந்து ஏராளமான பயணிகள் கோவில்பட்டி மார்க்கமாக பல்வேறு ஊர்களுக்கு சென்று வருகிறார்கள்.
இந்நிலையத்தில் ஒரேயொரு பயணச்சீட்டு கொடுக்கும் அறை இருப்பதாலும் தமிழ் தெரியாத பணியாளர் பணிபுரிவதாலும் ரெயில் பயணிகள் பயணச்சீட்டு பெறுவதில் மிகுந்த சிரமங்களை அனுபவித்து வருகிறார்கள்.
எனவே கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் கூடுதலாக பயணச்சீட்டு வழங்கும் மையங்களை திறந்திடவும் , தமிழ் தெரிந்தவர்களை பணியில் அமர்த்திடவும் வேண்டும்..
கோவில்பட்டியில் நின்று சென்று கொண்டிருந்த பல ரெயில்கள் கொரோனா காலத்திற்கு பிறகு நிற்க்காமல் செல்கிறது. எனவே மேற்படி நிறுத்தப்பட்ட ரெயில்களையும் , வந்தேபாரத் உள்பட புதிய ரெயில்களையும் கோவில்பட்டியில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது,