கோவில்பட்டி அருகே நிலக்கரி ஏற்றி வந்த லாரி தடுப்புச் சுவரில் மோதி தீப்பிடித்தது; டிரைவர், கிளினர் உயிர் தப்பினர்

தூத்துக்குடியில் இருந்து சிவகாசி பேப்பர் மில்லுக்கு நிலக்கரி பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி நேற்று இரவு புறப்பட்டு சென்றது. லாரியை எப்போதும் வென்றான் அருகேயுள்ள மஞ்ச நாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த கற்பகராஜா (வயது 30)என்பவர் ஓட்டினார்.
கோவில்பட்டி அருகே தெற்கு திட்டங்குளம் பகுதியில் இன்று அதிகாலை 2.25 மணிக்கு லாரி வந்தபோது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் வேகமாக மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் லாரியின் முன்பக்கம் துண்டாகியது. மேலும் லாரியின் டீசல் டேங்க்கில் தீப்பொறி ஏற்பட்டு மளமளவென லாரியின் பிற பகுதிகளுக்கு தீ பரவி லாரி முழுவதும் கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது.
லாரி டிரைவர் கற்பகராஜா, கிளீனர் ஆழ்வார் திருநகரியை சேர்ந்த முருகேசன் ஆகியோர் லாரியின் கண்ணாடியை உடைத்து கீழே குதித்து உயிர் தப்பினர்.
இது பற்றிய தகவல் அறிந்து கோவில்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தர்ராஜன். காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பார்த்தீபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று எட்டயபுரம் நெடுஞ்சாலையில் போக்குவரத்தை வேறு பாதைக்கு திருப்பி விட்டனர்.
தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒன்றரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் லாரி முற்றிலும் எரிந்து சாம்பலானது.விபத்து காரணமாக கோவில்பட்டி எட்டயபுரம் நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்து தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
