ஓசூரில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் சுற்றுப்பயணம்

திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி தலைமையிலான 11 பேர் கொண்ட குழு மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் அந்த குழுவினர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று வருகின்றனர்.
இன்று (9/2/2024) ஒசூா் – தளி சாலை ஆனந்த் கிராண்ட் பேலஸ் திருமண மண்டபத்தில் இந்த குழுவினரின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த தொழில்துறையினர், கல்வியாளர்கள், சிறு குறு தொழில் முனைவோர்கள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் சங்கங்கள், தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள், திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி சார்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட என அனைத்துத் தரப்பினரும் கலந்துகொண்டு தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினருடன் கலந்துரையாடி கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

திமுக வர்த்தகர் அணி துணைத் தலைவர் மற்றும் தமிழக அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன், தி.மு.க. அயலக அணிச் செயலாளர் எம்.எம்.அப்துல்லா எம்.பி, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் பரிந்துரைகளை மக்களிடமிருந்து பெற்றனர்.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ, தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன், ஓசூர் மாநகர மேயர் சத்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து முடித்ததும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்த கருத்துகள் மற்றும் பொது மக்கள் தெரிவித்த கருத்துகள் அனைத்தும் ஆய்வு செய்யப்படும். அவை அனைத்தும் தொகுக்கப்பட்டு தி.மு.க. தேர்தல் அறிக்கையாக இறுதி செய்யப்படும். மேலும், பொதுமக்களிடம் கருத்துக்கேட்கும் நடைமுறை துவங்கியுள்ளது..
