திருச்செந்தூர், ராமேசுவரம் கடற்கரையில் தை அமாவாசை தர்ப்பணம்

திருச்செந்தூர், ராமேசுவரம் கடற்கரையில் தை அமாவாசை தினத்தை முன்னிட்டு ஏராளமானவர்கள் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மகாளய அமாவாசை ஆகிய நாட்களில் இந்துக்கள் தங்கள் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.
ஆறு, குளம், கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடி கரையோரம் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்வார்கள்.
இன்று தை அமாவாசை தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர், ராமேசுவரம் கடற்கரையில் ஏராளமானோர் அதிகாலையே குவிந்தனர். அவர்கள் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
தூத்துக்குடியில் உள்ள கடற்கரையில் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
இதேபோல் திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதிகளிலும், பாபநாசத்திலும் அதிகமானோர் கூடி தர்ப்பணம் செய்தனர்.
