கோவில்பட்டியில் பெண் அதிகாரி மூக்கில் குத்திய தற்காலிக ஊழியர்

கோவில்பட்டி யூனியன் அலுவலக வளாகத்தில் உதவி வேளாண்மை இயக்குனர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்துக்கு தூத்துக்குடியில் இருந்து வேளாண்மை துணை இயக்குனர் மனோரஞ்சிதம் (வயது 41) ஆய்வு மேற்கொண்டார்.
ஊழியர்களின் வருகை பதிவேட்டினை ஆய்வு செய்தபோது தற்காலிக ஊழியர் தனபாலன் என்பவர் பலநாட்களாக வருகை பதிவேட்டில் கையெழுத்து போடாமல் இருந்ததை கண்டுபிடித்தார். இது பற்றி அந்த ஊழியரை அழைத்து விசாரித்தார்,.
இதனால் ஆத்திரம் அடைந்த தனபாலன், பெண் அதிகாரி மனோரஞ்சிதத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் அவர் மனோரஞ்சிதம் மூக்கில் கையால் ஓங்கி குத்தினார். இதில் மோதிரம் மூக்கில் கிழித்து ரத்தம் சிந்தியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மற்ற ஊழியர்கள் தலையிட்டு சமாதானப்படுத்தினார்கள். அந்த சமயத்தில் தனபாலன் அங்கிருந்து நழுவி விட்டார். அதிகாரி மனோரஞ்சிதம் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை பெற்றபிறகு தூத்துக்குடி மருத்துவமனைக்கு சென்றார்.
இதுபற்றி கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பெண் அதிகாரியை தாக்கிய தனபாலன் மீது நான்கு பிரிவுகளில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
