அ.தி.மு.க. வின் எதிரி பா.ஜ.க. தான் ‘-முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்

பேரறிஞர் அண்ணாவின் 55 வது நினைவு நாளையொட்டி சென்னையில் அவரது நினைவிடம் அருகே மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது திருவுருவ படத்திற்க்கு கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி மலர் தூவியும், மலர் வளையும் வைத்தும் மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து தலைமைக்கழக நிர்வாகிகள்,முன்னாள் அமைச்சர்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள்,திரளான கழக நிர்வாகிகள் அண்ணாவின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.இதனை தொடர்ந்து அ. தி. மு. க.அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
மாநில உரிமைக்காகவும், ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவும் தொடர்ந்து பாடுபட்ட பேரறிஞர் அண்ணா என்றென்றும் மக்கள் மனதில் நிலைத்திருப்பார். அண்ணாவின் வழியில் ஆட்சி நடத்துவதாக கூறிக் கொண்டிருக்கும் திமுக, மத்தியில் ஆட்சியில் இருக்கும் போதெல்லாம் மாநில உரிமையை மத்திய அரசிடம் அடகு வைத்தது.அண்ணாவின் பெயரை உச்சரிப்பதற்கு திமுகவுக்கு எந்த அருகதையும் கிடையாது.
தமிழகத்தில் விலைவாசி உயர்வில் இருந்து சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருப்பது வரை ஒட்டுமொத்த தமிழக மக்களும் திமுக அரசு மீது கடும் அதிருப்தியில் உள்ளார்கள்.எனவே 2026 ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் அதிமுக நிச்சயமாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். அதற்கு அச்சாரமாக இந்த நாடாளுமன்ற தேர்தல் திகழும்.
தமிழகத்தில் உள்ளாட்சித் துறையில் இருந்து அனைத்து நிலைகளிலும் ஊழல் ஆட்சி செய்து வருகிறது திமுக அரசு.
நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பதற்கு தேவையான அனைத்து பணிகளையும் அதிமுக தொடங்கியுள்ளது.கழகத்தினர் தங்களது பணிகளை தீவிரமாக செய்து வருகின்றனர். அதிமுக வின் எதிரி பாஜக தான்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்
.
.
.
