• June 7, 2025

தூத்துக்குடியில் வெள்ள சேத பகுதிகளை தலைமைச் செயலாளர் பார்வையிட்டார்

 தூத்துக்குடியில் வெள்ள சேத பகுதிகளை தலைமைச் செயலாளர் பார்வையிட்டார்

 தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த அதிகனமழை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இன்று நேரில் பார்வையிட்டார்.

மறவன்மடம் ஊராட்சி அந்தோனியார்புரம் பாலத்தினை தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்து, அப்பகுதி மக்களிடம் வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் தூத்துக்குடி  பைபாஸ் பாலம் அருகில் செங்குளம் ஓடையிலிருந்து உப்பார் ஓடைக்கு செல்லும் மழை நீர் வடிகாலினை நேரில் பார்வையிட்டார்.

அதிகனமழை  காரணமாக பாதிக்கப்பட்ட தமிழ்ச்சாலைப் பகுதிகளை நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். எட்டையாபுரம் ரோடு 3ஆம் கேட் மேம்பாலத்திலிருந்து பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா மாநகராட்சிக்குட்பட்ட பேல்பேட்டை –  செல்வநாயகபுரம் சந்திப்புப் பகுதியில் உள்ள கருத்தப்பாலத்தில் ஏற்பட்ட அடைப்புகளை தூர்வாரி, மின்மோட்டர்கள் மூலம் மழைநீரை வெளியேற்றும் பணிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

 தலைமை செயலாளருடன் தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகள் சென்று இருந்தனர்.

மீட்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, எஸ்பி பாலாஜி சரவணன், மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் ஆகியோரிடம் கேட்டறிந்தார். பின்னர் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நிருபர்களிடம் கூறியதாவது:-

தூத்துக்குடி மாநகர பகுதிகளில் தேங்கி உள்ள தண்ணீரை பக்கிள் ஓடை மூலமாக வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் தேங்கிய வெள்ள நீர் பம்பிங் செய்யப்பட்டும் வெளியேற்றப்படுகிறது. அதற்கு தேவையான கூடுதல் மோட்டார்கள் வரவழைக்கப்பட்டுள்ளது. ரயில்வே கேட் பகுதிக்குள் கூடுதல் தண்ணீர் தேங்கி உள்ளது. அதனை வெளியேற்றும் பணிகளும் நடந்து வருகிறது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளம், மின்சாரம் தாக்கி, வீடு இடிந்து என 22 பேர் பலியாகி உள்ளனர். நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் 40 முதல் 55 சென்டி மீட்டர் வரை மழை பெய்துள்ளது. அதன் மூலம் 150 டி.எம்.சி. தண்ணீர் வந்துள்ளது. இது மணிமுத்தாறு, பாபநாசம் அணைகளின் கொள்ளளவை விட 10 மடங்கு அதிகமாகும். தூத்துக்குடி மாவட்டத்தில் வாறுகால்கள் முறையாக தூர்வாரப்பட்டு உள்ளது. தூத்துக்குடியில் ரூ.200 கோடியில் வடிகால் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

வரலாறு காணாத வகையில் பெய்த மழை காரணமாகவே இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இழப்பீடு வழங்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. பயிர்கள் கணக்கிடும் பணியும் நடந்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் மீட்பு பணிகள் முடிந்துள்ளது. எனினும் மாநகர பகுதிகளில் தண்ணீர் முழுமையாக வடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *