தூத்துக்குடியில் 50 இடங்களில் மலிவு விலையில் காய்கறிகள் விற்பனை

தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகள் மழைவெள்ளத்தில் சிக்கி சின்னாபின்னமாகி கிடக்கிறது. தண்ணீர் தேங்கி கிடப்பதால் வாழ்வாதாரம் இழந்து மக்கள் தவிக்கிறார்கள். இவர்களுக்கு பல்வேறு சமூக அமைப்புகள் சார்பில் உணவு மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 50 இடங்களில் மலிவு விலையில் காய்கறிகள் விற்பனை நடைபெறுகிறது.இது தொடர்பாக மாவட்ட ஆட்சியா் அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-‘

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18 ஆகிய 2 நாட்கள் பெய்த கனமழையால் பெரும்பாலான இடங்களில் வெள்ளநீா் சூழ்ந்தது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதற்கான மீட்புப் பணிகள், நிவாரணப் பணிகள் போா்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையே , வேளாண்மை – உழவா் நலத் துறை வேளாண்மை உற்பத்தி ஆணையரும் அரசுச் செயலருமான அபூா்வா தலைமையில், துறையின் ஆணையா் சுப்பிரமணியம், தோட்டக்கலை – மலைப்பயிா்கள் துறை இயக்குநா் ஆா். பிருந்தாதேவி ஆகியோா் முன்னிலையில், இரு துறைகள் சாா்பில் கனமழையால் பாதிக்கப்பட்ட 50 பகுதிகளில் உள்ள மக்களுக்கு மலிவு விலையில் தரமான தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், வெண்டைக்காய், உருளைக்கிழங்கு, கத்தரிக்காய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் விநியோகிக்கப்படுகின்றன.
இப்பணியில் தூத்துக்குடி, தென்காசி, விருதுநகா், மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த 50 உதவி தோட்டக்கலை அலுவலா்கள், 50 உதவி வேளாண் அலுவலா்கள் தொடா்ந்து 3ஆவது நாளாக ஈடுபட்டனா்.
இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
