நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண உதவியாக ரூ.20 ஆயிரம்; என்.ஆர்.தனபாலன் வலியுறுத்தல்

பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

கடந்த 3 தினங்களுக்கு முன்னர் தென்மாவட்டங்களில் பெய்த கொடூர மழையால் தென்மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு உடுத்த துணி தவிர மாற்று துணிகளுக்கு வழி இல்லாத நிலைமையை வெள்ளம் உருவாக்கியது. வீடுகளில் உள்ள பொருட்கள் அடித்து செல்லப்பட்டும், வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டும் வீணடிக்கப்பட்டு விட்டது.
வீடுகளில் வளர்த்து வந்த கால்நடைகள் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டு மிகப்பெரிய பொருளாதார பின்னடைவை ஏற்படுத்திவிட்டது. அடுத்தவேளை சாப்பாட்டுக்கு என்ன செய்வதென்று தெரியாத நிலைமையில் தென்மாவட்ட மக்கள் உள்ளனர். இந்த நிலையில் இருந்து மீண்டும் முந்தைய நிலைமைக்கு திரும்புவதற்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் வரை ஆகும். வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள முதியவர்கள், குழந்தைகள், பெண்கள் மற்றும் அனைவரின் நலனையும் கருத்தில் கொண்டு தென்மாவட்ட மக்களின் அடிப்படை தேவையை உருவாக்கி கொள்ளவதற்காக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட மக்களின் குடும்ப அட்டைகள் மூலம் தலா 20 ஆயிரம் ரூபாய் உடனடியாக வழங்கிடவேண்டும்.
குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளும் குளங்களும் நிரம்பி வாய்க்கால்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் மூழ்கி அடித்துச் செல்லப்பட்டு விட்டது. இம்மாவட்ட விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுகட்டும் வகையில் அரசு ஏக்கருக்கு குறைந்தபட்சம் ரூ.25 ஆயிரம் வழங்கவும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கால்நடைகளை கணக்கீடு செய்து அவற்றிற்கான இழப்பீட்டு தொகையையும் அரசு வழங்க வேண்டும் என்று பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்
இவ்வாறு என்.ஆர்.தனபாலன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
