கனமழையால் பயிர்கள் பாதிப்பு: நிவாரணம் கோரி தேசிய விவசாயிகள் சங்கத்தினர் மனு

\தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த மிக மிக கனமழையால் முழுமையாக பாதிப்பு அடைந்த பயிர்கள், கால்நடைகள், மனித உயிர் இழப்புக்கு நிவாரணம் கோரி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தேசிய விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் சேதம் அடைந்த பயிர்களை கைகளில் வைத்து இருந்தனர்,
ஆர்ப்பாட்டத்துக்கு தேசிய விவசாயிகள் சங்க மாநில தலைவர் வழக்கறிஞர் ரெங்கநாயகலு தலைமை தாங்கினார்.சமூக நல ஆர்வலர் வழக்கறிஞர் அய்யலுசாமி முன்னிலை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட தேசிய விவசாயிகள் சங்க தலைவர் ரவி நாயுடு, கோவில்பட்டி ஒன்றிய தலைவர் ஜெயக்குமார், இயற்கை விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் கருப்பசாமி, ஞானமூர்த்தி, ஒன்றிய இளைஞர் அணி தலைவர் ஸ்ரீ பதி மற்றும் விவசாயிகள் பாதிக்கப்பட்ட பயிர்களுடன் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு பிறகு கோட்டாட்சியர் உதவியாளர் நிஷாந்தினியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறி இருந்ததாவது:-.
வளி மண்டல காற்று அழுத்த தாழ்வு மண்டலத்தால் தென் மாவட்டங்களில் யாரும் எதிர்பாராத அளவுக்கு மழை பெய்து ஆறுகள், ஓடைகள், குளங்கள், குட்டைகள் நிரம்பி மறுகால் மற்றும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இந்த மழை நீர் மற்றும் வெள்ளத்தால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மானாவாரி பயிர்கள், நஞ்சை பயிர்கள், தோட்ட பயிர்கள் முழுவதும் பாதிப்பு அடைந்து உள்ளது.
மானாவாரி நிலங்களில் உள்ள பாசி, உளுந்து, மக்காச்சோளம், பருத்தி ஆகிய பயிர்களும் நெல், வாழை, வெங்காயம், மிளகாய் போன்ற பயிர்கள் முற்றிலும் பாதிப்பு அடைந்து உள்ளது. புஞ்சை நிலங்களுக்கு ஏக்கர் 1 க்கு ரூ. 30000, மிளகாய், பருத்தி, வாழை பயிர்களுக்கு ரூ. 50000 நிவாரணம் வழங்க வேண்டும்,
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கால்நடைகளான எருமை மற்றும் பசுக்களுக்கு ரூ. 50000, இறந்து போன ஆடுகள் மற்றும் கன்றுகளுக்கு ரூ. 10000 , இறந்த பன்றிகளுக்கு ரூ 5000 நிவாரணம் வழங்க வேண்டும். அத்துடன் ஏராளமான பேர் வீடுகள் இழந்து உள்ளார்கள். அவர்களுக்கு ரூ 500000 , வெள்ளத்தில் இறந்து போனவர்களின் குடும்பங்களுக்கு ரூ 10 லட்சம் நிதி உதவி வழங்க தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.
4 நாட்களாக உணவு, தண்ணீர் கிடைக்காமல் தவித்தும், அத்துடன் வீட்டில் உள்ள பொருள்கள் பாழ்பட்டும் போயுள்ளது.வேலைக்கும் செல்ல முடியாத நிலை உள்ளது. வீட்டில் பொருள் இழப்பு எவ்வளவு என்று கணக்கெடுப்பு செய்து இழப்பீடு வழங்கியும் அனைத்து ரேஷன் கார்டுக்களுக்கும் தலா 10000 வழங்க வேண்டும்.
இந்த பெருமழையால் ஆறு, குளம், ஓடை, சாலை, பாலம் ஆகிய அனைத்தும் உடைப்பு எடுத்து அரிப்பு ஏற்பட்டுள்ளது. விவசாய நிலங்களில் மண் அரிப்பும் உடைப்பும் ஏற்பட்டு உள்ளது. போர்க்கால நடவடிக்கை எடுத்து சீர் செய்து தரவேண்டும்.
இவ்வாறு மனுவில்கூறப்பட்டு இருந்தது.
