கோவில்பட்டியில் இரவு பகலாக கனமழை-சாலைகளில் பெருக்கெடுத்த தண்ணீர்; தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரி களுக்கு விடுமுறை

தூத்துக்குடி மாவட்டத்தில் 17, 18 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்திருந்தது. அதன்படி நேற்று காலை முதல் சாரல் மழை பெய்தது. இடையிடையே தூறல் மழை பொழிந்தது.
கோவில்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் சாரல் மழை காரணமாக குளிர்ந்த காற்று வீசியது. இதனால் குளு குளு சீசன் நிலவியது.
காலை முதல்பெய்த தூறல் மழையானது நள்ளிரவுக்கு பிறகு கனமழையாக மாறியது. இந்த மழை இரவு பகலாக பெய்தது.. இரவு முழுவதும் பெய்த மழை இன்று காலையும் நீடித்தது.
தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இளையரசநேந்தல் ரோட்டில் உள்ள உள்ள தரைப்பாலம் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் தேங்கியது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. நகராட்சி ஊழியர்கள் விரைந்து வந்து மோட்டார் மூலம் தண்ணீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.



தொடர் மழை காரணமாக கோவில்பட்டி நகர சாலைகளில் மக்கள் நடமாட்டம் மிகவும் குறைவாக காணப்பட்டது. தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடர் மழை எச்சரிக்கை காரணமாக நாளை 18ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பள்ளிக்கூடங்களுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
உயர் கல்வி வகுப்புகளுக்கு நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு வேறொரு நாளில் நடத்தப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர்லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
இதேபோல் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
