பா.ஜ.க.வுடன் தி.மு.க ரகசிய உறவு;டி. ஜெயக்குமார் சொல்கிறார்

சென்னை திரு.வி.க நகரில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய பின்னர் செய்தியாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் அளித்த பேட்டி. அளித்தார்.
அவர் கூறியதாவது :-
காவிரி விவகாரத்தில், தற்போதைய தமிழக முதல்வரின் நடவடிக்கை என்பது முழுக்க,முழுக்க தோல்வி அடைந்துவிட்டது. நமது உரிமை என்பது 205 டி.எம்.சி தண்ணீர், இதனைப் புரட்சித்தலைவர்,புரட்சித் தலைவி அம்மா,எடப்பாடியார் ஆகியோரது ஆட்சியில் அரசிதழில் வெளியிடப்பட்டு, அதன்படி குழுக்கள் போடப்பட்டு, உரிமையை மீட்டெடுத்தது அ. தி. மு. க.தான்.
ஆனால் இந்த அரசு,அத்தகைய உரிமை பறிபோகின்ற அளவில், இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்தும் காவிரி உரிமை குறித்து எதுவும் வாய் திறக்காமல் இருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் கழகம் மீட்டெடுத்த 205 டி.எம்.சி தண்ணீர், உரிய காலத்தில் கிடைக்க கர்நாடக அரசிடம் உறுதிப்படுத்தவேண்டும்.
இது குறித்து இந்தியா கூட்டணியில் வலியுறுத்தவேண்டும்.வலியுறுத்துவாரா என்றால் நிச்சயமாகப் பேச மாட்டார். டெல்லிக்குச் சென்று கூட்டத்தில் மட்டும் கலந்துக்கொண்டு வருவார்.
மாநில உரிமை விவகாரத்தில் தி.மு.க சுயநலத்தோடு செயல்படுகிறது. கூட்டணியில் நீடிக்கவேண்டும் என்ற சுயநலம். மாநில உரிமை காக்கப்படவேண்டும் என்று நாடாளுமன்றத்தில் ஒலிக்கப்பட வேண்டும்.
காவிரி விவகாரத்தில் திமுக தோல்வி அடைந்துவிட்டது என்பதுதான் உண்மை. அனைத்து விஷயத்திலும் உரிமையை மீட்டெடுத்தது கழகம்தான். அந்த உரிமையைப் பெற்றுத் தருவதில் தி.மு.க தோல்வி அடைந்துவிட்டது. எங்களைப் பொறுத்தவரையில் அரசியல் என்பதைவிட மக்களின் உரிமை என்பதுதான் முக்கியம்.டெல்டா மக்களுக்கு நாங்கள் பெற்று தந்த உரிமை தொடரவேண்டும். நாங்கள் உரிமைகளை பெற்றுத் தருவதில் உறுதியாக இருக்கிறோம்.
தி.மு.கவைப் பொறுத்தவரையில் அந்த உறுதி இல்லை. புரட்சித்தலைவி அம்மா காலத்திலும் சரி,எடப்பாடியார் ஆட்சியிலும் சரி செக் டேம் நிறையக் கட்டினோம். இதனால் கடலுக்கு செல்லும் தண்ணீர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. எங்கள் ஆட்சி காலத்தில் நீர் மேலாண்மையை நிலை நிறுத்தினோம். இதனால் எங்கள் ஆட்சியில் நிலத்தடி நீர் அதிகமானது. நீர் மேலாண்மையில் கிஞ்சித்தும் கூட, ஒரு துரும்பைக்கூடக் கிள்ளி போட்டது கிடையாது.
தமிழகத்திற்கு வந்த மத்தியக் குழு மக்களைச் சந்திருக்கவேண்டும்.அப்போதுதான் மக்கள் தங்களின் குறைகளைத் தெரிவிக்க முடியும். அப்போதுதான் உரிய நிதியை வழங்குவார்கள்.
அந்த குழு வந்ததால்,நேரடியாக வந்து பார்த்துவிட்டு அறிக்கையை அளித்துவிட்டுச் சென்று விடுவார்கள்.ஆனால் இந்த முறை சிறப்பாக உள்ளது என்று சொல்கிறார்கள் என்றால்!?அங்குதான் சந்தேகம் எழுகிறது. ஏன் என்றால் பா.ஜ.க எங்காவது வந்து பார்வையிட்டார்களா?இந்த ஆட்சி குறித்து விமர்சனம் ஏதாவது செய்தார்களா? அப்படி என்றால் பாஜகவுடன் தி.மு.க ரகசிய உறவு என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. மத்தியில் உள்ளவர்கள் சொல்லிதான் இந்த குழு இந்த அரசு சிறப்பாகச் செயல்பட்டது என்று தெரிவித்துள்ளது. அப்படி என்றால் தி.மு.கவுடன் பா.ஜ.க ஒத்துப்போகிறது என்றுதான் மக்கள் நினைக்கிறார்கள். தி.மு.க என்றாலே சந்தர்ப்பவாதத்தின் உச்சம்தான். “கூடா நட்பு கேடாய் முடியும்” என்றார் கருணாநிதி.அதன் பிறகு பாஜவுடன் கூட்டணி வைத்துக்கொண்டார். அதேபோல இந்திராகாந்தி தமிழகத்திற்கு வந்தால் கருப்பு கொடி காட்டுவோம் என்றார். மதுரைக்கு வரும்போது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டு அம்மையாருக்கு ரத்தம் வந்தது.அந்த ரத்தம் குறித்து அவர் என்ன பேசினார் என்பது வரலாறு. அதன்பிறகு வந்த தேர்தலில் “நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக” என்று பல்டி அடித்தார்.
எங்களைப் பொறுத்தவரையில், காவிரி விவகாரம் தொடர்பாக அம்மா உடனடியாக முடிவு எடுத்து ஆதரவை திரும்பப்பெற்றார்.ஆனால் கருணாநிதி மதவாத சக்தியோடு கூட்டணி இல்லை என்று சொல்லிவிட்டு அதே ஆண்டில் கூட்டணி வைத்தார்.பதவி சுகத்திற்காகக் கொள்கை அனைத்தையும் மறந்துவிட்டு அவர்களிடம் சென்று ஒட்டிக்கொண்டார்.இப்படி பதவி சுகத்திற்காக எதைவேண்டுமானாலும் தி.மு.க செய்யும்.
தற்போது அரசு தரும் நிவாரணத்தை வங்கிக்கணக்கில் செலுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.டோக்கன் வாங்குவதற்காகப் பல நாட்கள் அலைய வேண்டிய நிலை உள்ளது. வீடு வீடாகச் சென்றுதான் டோக்கன் தரவேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவுகளை மீறி தற்போது டோக்கன் வழங்கப்பட்டுவருகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் சிரமத்திற்கு உள்ளாகும் வகையில் டோக்கன் வழங்கப்படுகிறது.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்
