சென்னை எண்ணூர் கடலில் கலந்துள்ள கச்சா எண்ணெய் அகற்ற நடவடிக்கை; டி.ஜெயக்குமார் வலியுறுத்தல்

சென்னை எண்ணூர் பகுதியில் கடலில் கச்சா எண்ணெய் கலந்துள்ள பகுதிகளை முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் படகில் சென்று ஆய்வு செய்தார்.
அவருடன் முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி மற்றும் கட்சி நிர்வாகிகள் சென்று இருந்தனர். ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது டி.ஜெயக்குமார் கூறியதாவது:-.
முகத்துவாரம் தான் மீனவர்களுக்கு வாழ்வாதாரம். அதேபோல முகத்துவாரத்தால் மீன்கள் இனவிருத்தி அடைந்து அதன் மூலம் கடலுக்கு சென்று மீன் உற்பத்தி அதிகமாகும். அதனைச் சார்ந்த மீனவ கிராமங்களுக்கும் ஒரு வாழ்வாதாரம் கிடைக்கும்.
அரசு வெள்ளத்தைத் தடுக்க தவறியதன் காரணமாக ரூ.6 ஆயிரம் அளித்தாலும்கூட கூடுதலாக நிவாரணங்களை வழங்க வேண்டும். பழவேற்காடு முதல் மரக்காணம் வரை கணக்கெடுப்பு எடுக்கவேண்டும். குறிப்பாக முகத்துவாரத்தை ஒட்டியுள்ள 6 கிராம மக்களுடைய படகுகள் வீணாகி விட்டன.
ஏற்கனவே 30 ம் தேதியிலிருந்து மீனவர்கள தொழிலுக்குப் போகவில்லை.தற்போது அவர்களின் கப்பலுக்குள் கச்சா எண்ணெய் போய்விட்டது. அதனை சுத்தம் செய்வதற்கு ஒரு நிவாரணத்தை வழங்கவேண்டும். அனைவருக்கும் வலை போய்விட்டது. இந்த நிலையில் படகுகளை எடுத்துச்சென்றால் அது தீ பிடிக்கும் நிலை உள்ளது.
ஏற்கனவே அம்மா ஆட்சிக் காலத்தில் தெர்மல் பிளாண்ட் கட்டும்போது ஒவ்வொரு வீட்டிற்கும் வேலை அளித்தோம். சி.பி.சி.எல். செய்த தவற்றுக்கு இந்த 6 கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலை அளிக்க வேண்டும். நிவாரணம் அளிக்க வேண்டும். படகுகளைச் சரி செய்வதற்கான பணத்தை அளிக்கவேண்டும். முதலில் எண்ணெய்களை மொத்தமாக எடுக்கவேண்டும். ஏன் என்றால் இந்த 6 கிராம மக்களுக்குச் சுவாச பிரச்சினை வருவதற்கு வாய்ப்பு உண்டு.
நவீனத் தொழில்நுட்பம் வளர்ந்த நிலையில் அந்த கச்சா எண்ணெய்களைப் போர்க்கால அடிப்படையில் எடுக்கவேண்டும். கற்காலத்தில் இருப்பது போல வாளி மூலம் எடுத்து வருகிறார்கள். எப்படிப்பட்ட கோமாளித்தனமான அரசு என்பது இதன் மூலம் தெரிகிறது. ஐ.ஐ.டி. மூலம் ஆலோசனை பெற்று உடனடியாக முகத்துவாரத்தை சரி செய்யும் நடவடிக்கையை எடுக்க வேண்டும். தற்போது வந்துள்ள மத்திய குழு மக்களை சந்திக்கவே இல்லை. மக்களை சந்தித்தால்தானே என்ன பிரச்சனை என்பது தெரியும்.
இந்த விளம்பர அரசு போட்டோக்களை காண்பித்துவிட்டது. இதனைப் பார்த்த மத்தியக் குழு இவர்கள் நன்றாகச் செயல்பட்டார்கள் என்று சொல்லிவிட்டார்கள். அவ்வளவுதான். அந்த குழு மக்களைச் சந்திக்கவிடாமல் காவல்துறை மூலம் தடுக்கப் பட்டார்கள். அப்போதுதான் உண்மை நிலை அறிந்து நிதி அதிகம் கிடைக்கும். ஆனால் இவர்களின் குட்டு வெளிப்பட்டுவிடும் என்று காவல்துறையை வைத்து மக்களை தடுத்துவிட்டு, இவர்கள் வெறும் புகைப்படத்தை மட்டும் காட்டியுள்ளனர். அவர்களும் நன்றாக செயல்பட்டுள்ளார்கள் என்று சொல்லிச் சென்றுவிட்டார்கள்.
ஆட்சியிலிருந்தாலும் இல்லாவிட்டாலும், மக்களைச் சந்திக்கும் இயக்கம் அதிமுக தான். அமைச்சர்கள் இங்கு எங்கே வந்தார்கள். ஆனால் களத்தில் மக்களோடு மக்களாக இருந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியாரின் ஆலோசனையின் படி மீட்புப்பணி, நிவாரணப்பணிகளை செய்தோம். அதிமுக ஆட்சியில் மழை வெள்ளத்தின் போது நாங்கள் மீனவர்களைப் பயன்படுத்தினோம்.
மக்கள் நலன் குறித்து இந்த அரசு கண்டுகொள்ளாமல் வஞ்சித்துள்ளது..உங்கள் வீட்டு பணத்தில் நாங்கள் நிவாரணம் கேட்கவில்லை. எங்கள் வரிப் பணத்தில்தான் கேட்கிறோம். முதலில் நீங்கள் யோக்கியமாக இருங்கள். 38 எம்பிக்கள் உள்ளீர்கள்.தற்போது பாராளுமன்றம் கூடியுள்ளது. அங்கு இந்த பிரச்சினையைத் தெரிவித்து அதிக அளவில் நிதியைப் பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுங்கள்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
