கோவில்பட்டி கூட்டுறவு வங்கியில் நிதிமுறைகேடு பற்றி விசாரணை நடத்தகோரி ஆட்சியரிடம் பா.ஜ.க. நிர்வாகிகள் மனு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதியை பாரதிய ஜனதா கட்சி வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர் வேல்ராஜா மற்றும் நிர்வாகிகள் சந்தித்து மனு அளித்தனர்,
அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
கோவில்பட்டி புதுரோட்டில் செயல்பட்டு வரும் ஏ393 கோவில்பட்டி கூட்டுறவு நகர வங்கி லிட், வங்கியில் பொதுமக்களின் பணத்தை நிதிமுறைகேடு செய்துள்ளனர்.
இதனால் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் தொழிலதிபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பலகோடி ரூபாய் நிதிமுறைகேடு நடைபெற்றுள்ள நிலையில் நிதிமுறைகேட்டில் ஈடுபட்ட எந்த அரசு அலுவலரும் பணியிடை மாற்றமோ, அல்லது துறை ரீதியிலான நடவடிக்கையோ இதுவரை அவர்கள் மீது மேற்கொள்ளப்படவில்லை.
அதே வங்கியில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ள அலுவலர்களை வைத்துக் கொண்டு விசாரணை செய்வதில் உள்நோக்கம் இருப்பதாகவே கருத வேண்டியுள்ளது.
ஆகவே, நிதிமுறைகேடு குறித்து ஓய்வு பெற்ற நீதியரசர் அல்லது வருவாய் கோட்டாட்சியர் அளவிற்கு தகுதி படைத்த அலுவலரை வைத்து விசாரணை நடத்தி வேண்டும்.
கூட்டுறவு சங்கத்தின் தற்போதைய நிர்வாகக் குழுவை கலைத்து, நிதிமுறைகேட்டில் ஈடுபட்ட நபர்கள் எதிர்காலத்தில் கூட்டுறவு சங்க தேர்தலில் போட்டியிட முடியாதவாறு நடவடிக்கை எடுத்திடவும், அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அவர்கள் இழந்த பணத்தை உடனடியாக உரிய இழப்பீட்டோடு வழங்கிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
