கோவில்பட்டியில் `முன்கூட்டியே வருமான வரி செலுத்துதல்’ விழிப்புணர்வு கூட்டம்

கோவில்பட்டி தொழில் வர்த்தக சங்க கட்டிடத்தில் `முன்கூட்டியே வருமான வரி செலுத்துதல்’ பற்றிய விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
கோவில்பட்டி பட்டய கணக்காளர்கள் மற்றும் தொழில் வர்த்தக சங்கம் சார்பில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு வருமான வரித்துறை உதவி ஆணையர் காசி சங்கர் தலைமை தாங்கி பேசினார்.
அவர் பேசுகையில், “வருமான வரி செலுத்த வேண்டியவர்கள் அந்தந்த வருடத்திற்கு செலுத்தக்கூடிய வருமான வரியை முன்கூட்டியே செலுத்த வேண்டிய அவசியம் குறித்தும், self tax கட்டுவதாலும், தாமதமாக கட்டுவதாலும் ஏற்படக்கூடிய பிரச்சினைகள்” பற்றியும் விளக்கினார்.
வருமான வரி அலுவலர்கள் செண்பகம், சிவபாலன் ஆகியோர் முன்கூட்டியே செலுத்த வேண்டிய வருமான வரி குறித்து பேசினர். தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்றவர்களின் கேள்விகள் மற்றும் பல்வேறு சந்தேகங்களுக்கு பதில் அளித்தனர்.
கூட்டத்தில் தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஆர். எஸ். ரமேஷ், துணைத் தலைவர் எம். எஸ்.எஸ்.வி. பாபு, செயலாளர் மகாலட்சுமி சந்திரசேகர், துணை செயலாளர் தெய்வேந்திரன், ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் விநாயகா ஜி ரமேஷ், ராதாகிருஷ்ணன், ஆடிட்டர் பாலசுப்பிரமணியன், தணிக்கையாளர்கள், வருமான வரி செலுத்தும் தொழில் முனைவோர், ரோட்டரி சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
