• June 7, 2025

மழை வெள்ளம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை ; அரசு மீது டி. ஜெயக்குமார் குற்றச்சாட்டு

 மழை வெள்ளம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை ; அரசு மீது டி. ஜெயக்குமார் குற்றச்சாட்டு

சென்னையில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது :-

வாழும் காலத்தில் மக்களின் தேவைகளை அறிந்து,அந்த தேவைகளை எல்லாம் நிறைவேற்றிய ஒரு உன்னதமான தலைவி அம்மா.  அவர்கள் மறைந்தாலும்கூட, இன்றும் உலகம் முழுவதும் வாழ்கின்ற தமிழர்கள் அத்தனைப்பேருமே போற்றக்கூடியவர்.

இன்று அம்மாவின் 7 ம் ஆண்டு நினைவுநாள். அவரின் நினைவை போற்றும் வகையில் கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடியார் தலைமையில் தலைமைக்கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள்,மாவட்ட கழக செயலாளர்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள்,நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழகத்தின் அத்தனை பிரிவைச் சார்ந்த அனைவரும் அம்மாவிற்கு மலர் அஞ்சலியைச் செலுத்தினோம்.

கேள்வி – இந்த புயலின்போது தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து..

பதில் – தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழை குறித்த முன்னெச்சரிக்கை அறிவிப்பு வந்துவிட்டது. வானிலை மையம் புயலின் காரணமாக 5 மாவட்டங்களில் கடுமையான பாதிப்புகள் இருக்கும் என்று அறிவித்தது. அறிவித்தவுடன் இந்த விடியா அரசு மக்களைத் தயார் செய்திருக்கவேண்டும்.மழை பாதிப்புகள் அதிகமாக இருக்கும் என்று இந்த அரசு தெரிவித்திருந்தால் மக்கள் அதற்கு ஏற்றவாறு தங்களுடைய வாழ்க்கை சூழ்நிலையை மாற்றி எதற்கும் தயார் நிலையில் இருந்திருப்பார்கள். அத்தியாவசிய பொருட்களை வாங்கி வீட்டில் வைத்திருப்பார்கள். 

மக்களை தயார்ப்படுத்தும் நடவடிக்கையில் அரசு கோட்டை விட்டுவிட்டது. ஆனால் கடல் மீது அப்பட்டமாகப் பழியைப் போடுகிறார்கள். கடல், தண்ணீரை உள் வாங்கவில்லையாம்.எங்கள் ஆட்சியில்கூடதான் கடல் இருந்தது. இவர்கள் ஆட்சியிலும் கடல் இருக்கிறது.கடல் எப்போதும் இருக்கும்.ஆனால்,இவர்கள் சொல்வது காதில் பூ சுற்றும் கதைதான். பொதுவாகப் பவுர்ணமி காலங்களில் முகத்துவாரங்களில் தண்ணீர் பீறிட்டு வரும். இது பவுர்ணமி நாட்களில் மட்டும்தான் நடக்கும். இந்த அரசில் யாரைக் கேட்டாலும் ஒரே பதில் கடல் உள்வாங்கவில்லை. கடல் அன்னை மீது பழியைப்  போட்டு  இன்றைக்குத் தப்பிக்கப் பார்க்கிறார்கள்.

2015 ஆம் ஆண்டை ஒப்பிடும்போது 50 சதவீத மழைதான் பெய்துள்ளது. அதற்கே பால் கிடைக்கவில்லை, மின்சாரம் கிடைக்கவில்லை. பாதுகாப்பு கருதி மின்சாரத்தை துண்டிக்கலாம். ஆனால் அதை ஏன் முன்கூட்டியே சொல்லவில்லை. முன்கூட்டியே சொல்லியிருந்தால் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருந்திருப்பார்கள்.அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைக்க மக்கள் தவறிவிட்டார்கள் என்றால் அதற்குக் காரணம் இந்த அரசுதான். அவர்கள் தான் இதற்கு பொறுப்பேற்றுக்கொள்ளவேண்டும். 

அமைச்சர் மா.சுப்பிரமணியன் மக்கள் அனைவரும் சந்தோஷமாக உள்ளார்கள் என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கப் பார்க்கிறார்.இல்லை இமயமலையையே மறைக்கும் வேலையைத்தான் அவர் செய்தார். இன்றைக்குப் பிரதான சாலைகள் மட்டுமல்லாமல் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. பல இடங்களில் தண்ணீர் தேங்கி அதனுடன் சாக்கடை நீரும் கலந்து விட்டது.

யாருக்கும் உணவு தரவில்லை.மருத்துவக்குழு எங்கும் செல்லவில்லை. எந்த மக்களும் மண்டல அலுவலகத்திற்கு வந்து சாப்பாட்டை  வாங்க முடியாது. வண்டி மூலமாகத்தான் குடிசைப்பகுதிகளுக்கோ,மற்ற மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கோ தரவேண்டும். 2 லட்சம் பேருக்குச் சாப்பாடு போட்டதாகச் சொல்கிறார்கள்.நானும் தொலைக்காட்சியில் பார்த்தேன்.ஒரு இடத்தில் கூட போட்ட மாதிரி தெரியவில்லை.கீழே இருந்து மேல் மட்டம் வரை பொய்தான். 

சென்னை மாநகராட்சிக்கு வந்த 4 ஆயிரம் புகார்களில் 300 புகார்களுக்குத்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.எந்த அளவுக்கு இந்த அரசு ஒரு செயல்பாடு இல்லாத அரசு என்பதற்கு இதைவிட ஒரு உதாரணம் வேறு எதுவும் இருக்க முடியாது. 

யாருமே தொலைப்பேசியை எடுக்கவில்லை. 23 பேர் வந்துவிட்டார்கள்,அதிகாரிகள் வந்துவிட்டார்கள் என்றார்கள்.ஆனால் யாரும் வேலை செய்யவில்லை. துறைகளுக்குள் ஒரு ஒருங்கிணைப்பு கிடையாது.ஒரு பக்கம் மாநகராட்சி,ஒரு பக்கம் மின்துறை,ஒரு பக்கம் குடி நீர் வடிகால் வாரியம் என தனித்தனியாக வேலை செய்கிறார்கள். துணை மின் நிலையம் ஒன்றில் ஒரு மரம் வீழ்ந்தது.இதனை மின்துறை எடுப்பதா அல்லது மாநகராட்சி எடுப்பதா என்று சர்ச்சை.இப்படிப்பட்ட நிலையை எண்ணிப் பார்க்கவேண்டும். முழுக்க முழுக்க நிர்வாக தோல்வி அடைந்த அரசுதான் இந்த அரசு என்பதை மக்கள் தற்போது உணருகிறார்கள்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *