பரிகாரபூஜை செய்வதாக கூறி 6½ பவுன் நகை அபேஸ்: கோவில்பட்டியை சேர்ந்தவருக்கு 3 ஆண்டு ஜெயில்
கோவில்பட்டி முத்துநகரை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் (வயது 42)) . இவர் நாரைக்கிணறு போலீஸ் எல்லைக்குட்பட்ட என்.புதூர் பகுதியை சேர்ந்த உறவினர் தமிழ்செல்வன் என்பவரது மனைவி உலகாண்ட ஈஸ்வரி வீட்டில் பரிகார பூஜை நடத்தினார்.
அப்போது உலகாண்ட ஈஸ்வரியின் 6½ பவுன் தங்க நகைகளை துணியால் மூடப்பட்ட ஒரு பாத்திரத்தில் வைக்க சொல்லி அவருக்கு தெரியாமல் அந்த நகைகளை எடுத்துக் கொண்டு, அதே பாத்திரத்தில் ஒரு கல்லை வைத்து விட்டு பரிகார நாட்கள் முடியும் வரை பாத்திரத்தை திறக்க கூடாது என்று கூறி தங்க நகைகளை மோசடி செய்து விட்ட்டார்.
நகையை பறிகொடுத்த உலகாண்ட ஈஸ்வரி அளித்த புகாரின் பேரில் நாரைக்கிணறு போலீசார் வழக்குபதிவு செய்து முத்துராமலிங்கத்தை கைது செய்தனர்.
இவ்வழக்கை விசாரணை செய்த அப்போதைய நாரைக்கிணறு காவல் நிலைய ஆய்வாளர் தர்மர் புலன் விசாரணை செய்து கடந்த 13.10.2021 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார். வழக்கின் விசாரணை மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஓட்டப்பிடாரத்தில் நடைபெற்று வந்தது.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயந்தி நேற்று தீர்ப்பு வழங்கினார். குற்றம் சாட்டப்பட்ட முத்துராமலிங்கத்துக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 10,000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் முருகேசன் ஆஜரானார். வழக்கில் விசாரணைக்கு ஆய்வாளர் தர்மர், அவருக்கு உதவியாக இருந்த முதல் நிலை காவலர் பெருமாள் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் பாராட்டினார்.