கோவில்பட்டியில் துணிகரம்: பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து ரூ.25 லட்சம் நகை கொள்ளை
கோவில்பட்டி கணேஷ்நகரை சேர்ந்தவர் சந்திரமோகன் (வயது 62). மதுரையில் ஓட்டல் வைத்திருந்தார். இவரது மனைவி அருள்மணி. இவர்களது மகன் கார்த்திக் (40). இவர் தேனியில் மனைவி மற்றும் மகனுடன் தங்கி தனியார் வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார்.
கோவில்பட்டி கணேஷ்நகரில் உள்ள வீட்டில் சந்திரமோகன், அவரது மனைவி அருள்மணி மட்டும் குடியிருந்து வருகின்றனர். கடந்த 27ம்தேதி மகனை பார்ப்பதற்காக சந்திரமோகனும், அவரது மனைவியும் வீட்டை பூட்டி விட்டு தேனிக்கு சென்றனர்.
வீட்டு வளாகத்தில் உள்ள செடிகளுக்கு அதேபகுதியை சேர்ந்த காவலாளி நடராஜன் என்பவர் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் ஊற்றி வந்தார். நேற்று தண்ணீர் ஊற்ற வீட்டிற்கு வந்த போது வீட்டிற்கு காம்பவுன்ட் கேட் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். மேலும் வீட்டின் மெயின் கதவும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
இதுகுறித்து நடராஜன், தேனியில் இருந்த சந்திரமோகனுக்கு தகவல் தெரிவித்தார். அவர், உடனடியாக புறப்பட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டினுள் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும் பீரோவில் இருந்த 62 பவுன் நகை, வெள்ளி பொருட்கள், பட்டுசேலைகள் உள்ளிட்ட ரூ.25 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
சந்திரமோகன் வெளியூர் சென்றிருப்பதை அறிந்து மர்ம நபர்கள் திட்டமிட்டு இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.