தூத்துக்குடி: பட்டப்பகலில் பால் வியாபாரி வெட்டிக் கொலை
தூத்துக்குடி பண்டாரம்பட்டி மேலதெருவை சேர்ந்தவர் ஆத்திமுத்து மகன் நந்தகுமார் (வயது 30), பால் வியாபாரம் செய்து வருகிறார். இன்று காலை 11 மணியளவில் வழக்கம்போல் பால் வியாபாரத்தை முடித்துவிட்டு தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
மீள விட்டான் ரோடு, பண்டாரம்பட்டி விலக்கு ரோட்டில் வந்தபோது 5 பேர் சேர்ந்து அவரை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.
இந்த தாக்குதலை சற்றும் எதிர்பார்க்காத நந்தகுமார், தனது மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டு விட்டு வெட்டுக்காயங்களுடன் ஓட்டம்பிடித்தார்.. ஆனாலும் அந்த கும்பல் அவரை ஓட ஓட விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.
ஒரு கட்டத்தில் ரத்தவெள்ளத்தில் நந்தகுமார் கீழே சாய்ந்தார். இதை பார்த்ததும் அந்த கும்பல் தப்பிச் சென்றுவிட்டது. பட்டப்பகலில் நடந்த இந்த கொலையை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையே இது பற்றி தகவல் அறிந்த சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் கொலை செய்யப்பட்டு கிடந்த நந்தகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அவரை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்தனர்? என்பது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், ரூரல் துணை சூப்பிரண்டு சுரேஷ் ஆகியோர் பார்வையிட்டனர்.