இந்தியாவின் மிகப் பெரிய நன்கொடையாளர் பட்டியலில் ஷிவ் நாடார் முதலிடம்

தமிழகத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான ஷிவ் நாடார் இந்தியாவின் மிகப் பெரிய நன்கொடையாளர் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளார்.
தினமும் அவர் 5 கோடியே 60 லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கி சாதனை படைத்து இருக்கிறார்.
“ஹுருன் இந்தியா” நிறுவனம் 2022 – 2023 நிதியாண்டில் அதிக நன்கொடை அளித்தவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதன்படி இந்தியாவில் தனி நபராகவும் குடும்பமாகவும் 119 பேர் ரூ.5 கோடிக்கும் மேல் பல்வேறு உதவிகளுக்காக நன்கொடைகளை வழங்கியுள்ளனர்.
இதில், ரூ.2042 கோடியை அளித்து நாட்டில் அதிக நன்கொடை அளித்தவர் பட்டியலில் முதலிடத்தில் ஹெச்.சி.எல். நிறுவனர் ஷிவ் நாடார் இடம் பிடித்து இருக்கிறார்.
நிதியாண்டு கணக்கிற்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ.5.6 கோடியை நன்கொடையாக அவர் அளித்திருக்கிறார்.
இரண்டாம் இடத்தில் விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜி மற்றும் அவரது குடும்பத்தினர் ரூ.1,774 கோடி நன்கொடை வழங்கியுள்ளனர்.
முகேஷ் அம்பானி மற்றும் குடும்பத்தினர் ரூ.336 கோடி அளித்து மூன்றாம் இடத்தில் உள்ளனர்.
குமார் மங்களம் பிர்லா & குடும்பத்தினர் ரூ.287 கோடி, கவுதம் அதானி ரூ.285 கோடியுடன் நான்காம் மற்றும் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளனர்.
இன்ஃபோசிஸ் நிறுவனர்களில் 4 பேர் அதிக நன்கொடை அளித்தவர்கள் பட்டியலில் உள்ளனர்.
பட்டியலில் வழக்கமாக இடம்பெறும் நன்கொடையாளர்களைத் தவிர புதிதாக 25 பேர் இணைந்துள்ளனர்.
இதில், பெரும்பாலானவர்கள் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காகவே நன்கொடைகளை அளித்துள்ளனர்.
ஆனால், ஷிவ் நாடார் கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களுங்காக நன்கொடை செய்திருக்கிறார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் உள்ள மூலைப் பொழி கிராமத்தில் பெரும் நிலக்கிழார் குடும்பத்தை சேர்ந்தவர் ஷிவ் நாடார்.
இவர் திருச்செந்தூர் முருகன் கோவில் சீரமைப்பு பணிகளுக்காக சமீபத்தில் ரூ.200 கோடி நன்கொடை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
மதுரையில் அவர் படித்த அரசு பள்ளி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு கிராமம் ஆகியவற்றை தத்தெடுத்து உதவி செய்வதுடன், பல்வேறு சேவைகளையும் செய்து வருகிறார்.
*
