அரசு பணியில் அனைத்து நிலைகளிலும் காலியிடங்கள் ; டி. ஜெயக்குமார் புகார்

அதிமுகவின் 52 வது நிறுவன தினத்தையொட்டி, சென்னை ராயபுரத்தில் அதிமுக அமைப்புச் செயலாளர் ஆர். மனோ ஏற்பாட்டில் ஏழை, எளிய மக்களுக்கு மதிய உணவு, நிதி உதவி ஆகியவற்றை முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் மீதான நம்பிக்கை மக்களுக்கு குறைந்து விட்டது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் முதல் செவிலியர்கள் வரை பற்றாக்குறை இருஇருக்கிறது. காலி பணியிடங்களை நிரப்ப அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர் அரசு பணியில் நியமிக்கப்படுவார்கள் என வாக்குறுதி அளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்த இரண்டரை ஆண்டுகளில் தற்போது வரை 12,000 பணியாளர்கள் மட்டுமே நியமித்திருகிறார்கள். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் ஒரு விதமான மர்ம காய்ச்சல் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. அவற்றை கட்டுப்படுத்தவும், தடுக்கவும் தமிழக சுகாதாரத்துறை தவறிவிட்டது.
நீட் தேர்வு விவகாரத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து போட்டு நீட் தேர்வை ரத்து செய்வதாக சொல்லிவிட்டு, தற்போது கையெழுத்து இயக்கம் நடத்துவதாக பித்தலாட்ட அரசு நாடகம் நடத்தி வருகிறது.
தமிழக அரசின் நடவடிக்கைகளால் ஒட்டுமொத்த மக்கள் மத்தியிலும் ஒருவிதமான எதிர்ப்பு அலை நிலவி வருகிறது. இந்த எதிர்ப்பலை நாடாளுமன்ற தேர்தலின் போது முழுமையாக எதிரொலிக்கும்.
அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, ஜாமீன் மறுக்கப்பட்டு வருகிறது. ஊரை அடித்து உலயில் போட்டவர்களின் கதி இப்படித்தான் வெளிப்படும்.. தமிழகத்தின் இயற்கையை சுரண்டி கொள்ளையடித்தவர்களுக்கு நீதிமன்ற மூலம் சரியான பதிலடி கிடைக்கும் .
இவ்வாறு டி.ஜெயக்குமார் கூறினார்.
