தூத்துக்குடி புதிய கலெக்டராக லட்சுமிபதி பதவி ஏற்றார்

தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக இருந்த செந்தில்ராஜ் அனைத்து தரப்பினரையும் அரவணைத்து செல்வார். அதிமுக ஆட்சியின் போது தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்ட செந்தில்ராஜ் திமுக ஆட்சியிலும் தொடர்ந்து அந்த பணியில் நீடித்து வந்தார்.
கடந்த 6 மாதத்துக்கு முன்பு இடமாற்றம் செய்யப்பட்டார். பின்னர் அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டு தொடர்ந்து பணியாற்றி வந்தார். 3 ஆண்டுகள் கலெக்டராக இருந்த செந்தில்ராஜ் கடந்த வாரம் பணி இடமாற்றம் செய்யப்பட்டார். அவர் சிப்காட் மேலாண் இயக்குனராக நியமனம் செய்யபட்டுள்ளார்.
செந்தில்ராஜிக்கு பதிலாக தூத்துக்குடி மாவட்ட புதிய கலெக்டராக செங்கல்பட்டு கலெக்டராக இருந்த லட்சுமிபதி நியமனம் செய்யப்பட்டு இருந்தார். அவர் இந்த மாவட்டத்தின் 27-வது கலெக்டர் ஆவார். இன்று காலை கலெக்டர் லட்சுமிபதி பதவி ஏற்றுக்கொண்டார்.
கலெக்டர் அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் தனது இருக்கையில் அமர்ந்து கலெக்டர் லட்சுமிபதி பணியை தொடங்கினார்.
புதிய கலெக்டர் லட்சுமிபதி, செய்தியாளர்களிடம் கூறுகையில்,‘ தூத்துக்குடி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும். அனைத்து திட்டங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும். நல்ல நடவடிக்கைகளை தொடர்ந்து செயல்படுத்துவோம். ’ என்று கூறினார்
