• June 7, 2025

அரசு மரியாதையுடன் பங்காரு அடிகளார் இறுதி சடங்கு ; முதல்-அமைச்சர் அறிவிப்பு

 அரசு மரியாதையுடன் பங்காரு அடிகளார் இறுதி சடங்கு ; முதல்-அமைச்சர் அறிவிப்பு

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் 82 வயதான அவர்  உடல்நல குறைவு காரணமாக கோவில் வளாகத்தில் உள்ள வீட்டில் இருந்தபடியே மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். 

இந்த நிலையில், நேற்று மாலை 5 மணி அளவில் பங்காரு அடிகளார் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது மரணச் செய்தியை அறிந்து பக்தர்கள் மேல்மருவத்தூரில் குவிந்து வருகிறார்கள். அவரது உடல் பொதுமக்கள் பார்வைக்காக , அவரது வீட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது. அவருக்கு பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

பங்காரு அடிகளார் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு . தா.மோ.அன்பரசன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினார்கள்.

பங்காரு அடிகளாரின் இறுதிச்சடங்கு இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதி சடங்கு  அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருக்கிறார்.

பங்காரு அடிகளாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பல லட்சம் மக்கள் கூட வாய்ப்பு உள்ளதால் சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பங்காரு அடிகளார் மறைவுக்கு அஞ்சலி செலுத்த வரும் பக்தர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது. இட்லி, தோசை, பொங்கல் என பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

பங்காரு அடிகளார் உடல் அடக்கம் அரசு மரியாதையுடன் நடக்கும் என்று அறிவித்துள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி இருப்பதாவது:-

ஆதிபராசக்தி பீடத்தை நிறுவி, அரை நூற்றாண்டிற்கும் மேலாக மிகச்சிறப்பாக நடத்தி, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகளையும் மக்களுக்கு வழங்கி வந்தார். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்தில் பெண்களே கருவறைக்குள் சென்று வழிபாடுகள் நடத்தும் புரட்சிகரமான நடைமுறைகளை வழக்கப்படுத்தினார். கோயில் கருவறைக்குள் அனைத்துச் சாதியினரும் சென்று அர்ச்சனை செய்ய வேண்டும் என்பதற்காக தி.மு.க பல ஆண்டுகளாகப் போராடி,  அதனை நடைமுறைப் படுத்தியும் வரும் நிலையில், அனைத்துப் பெண்களையும் கருவறைக்குள் சென்று அவர்களே பூசை செய்து வழிபடச் செய்த பங்காரு அடிகளார் ஆன்மிகப் புரட்சி, மிகவும் மதித்துப் போற்றத்தக்கது.

உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த அடிகளார், தற்போது மறைவுற்றிருப்பது, அவரது பக்தர்களுக்கு ஒரு பேரிழப்பாகும்.  பங்காரு அடிகளாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், பக்தர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். பங்காரு அடிகளார்  சேவைகளைப் போற்றும் வகையில், அரசு மரியாதையுடன் அவரது இறுதி நிகழ்வு நடைபெறும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறி இருக்கிறார்.  

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *