பாவத்திற்கும் நன்மை செய்யும் ஓடைப்பட்டி வன்னி விநாயகர் கோவில் வரலாறு

ஓடைப்பட்டி வன்னிமர விநாயகர் கோவில் …… இந்த கோவிலை தெரியாக வாகன ஓட்டிகள் இருக்க ,முடியாது. அந்த அளவுக்கு இந்த கோவில் பிரபலம் !
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து சாத்தூர் செல்லும் வழியில் இந்த ஊர் உள்ளது கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் இருந்து கோவில் 13 கி.மீ.தொலைவில் இருக்கிறது. கோவிலில் இருந்து சாத்தூர் 7 கிலோ மீட்டராகும்.
300 ஆண்டுகள் பழமையான வன்னிவிநாயகர் கோவில். நான்கு வழிச்சாலையில் இருந்து சிறிது தூரத்தில் இருக்கிறது. இங்கு வந்து வன்னி விநாயகரை வழிபட்டால் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். இருக்கன்குடி மாரியம்மன் கோவில், திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் தவறாமல் இங்கு வந்து தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம்.
மாதம் தோறும் வரும் சங்கடஹரசதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி, தை முதல் நாள், ஆங்கில புத்தாண்டு தினங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்படும் குறிப்பாக கோவில்பட்டி பகுதியில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து செல்கிறார்கள்..
நான்கு வழிச்சாலை அமைவதற்கு முன்பு இக்கோவில் வழியாக கன்னியாகுமரி, கோவில்பட்டி, நாகர்கோவில், மார்த்தாண்டம், மதுரை, திருச்சி, சென்னை என பல்வேறு ஊர்களுக்கு செல்லும் விரைவு பஸ்கள் இக்கோவில் முன்பு நிறுத்துவார்கள். வாகன ஓட்டுனர்கள் சுவாமி தரிசனம் செய்து பாதுகாப்பான பயணம் வேண்டி செல்வார்கள். பஸ்களில் செல்லும் பக்தர்கள், பஸ்சில் இருந்த படியே வணங்கி காணிக்கை செலுத்துவர்.
நான்கு வழிச்சாலைக்காக பாதை மாற்றப்பட்டதால் கோவில்பட்டி யில் இருந்து தினமும் மாலை சென்னை புறப்பட்டு செல்லும் டி.வி.எல்.எஸ். ஆம்னி பஸ் ஓட்டுனர்கள் மட்டும் தான் இந்த கோவில் வழியாகத்தான் செல்கிறார்கள். அவர்கள் பயணிகள் பாதுகாப்புக்கு வழிபாடு நடத்தி திருநீறு வாங்கி வந்து பயணிகளுக்கு கொடுப்பதை இன்றும் வழக்கமாக கொண்டுள்ளனர். ,மற்றபடி ஒரு சில நீண்ட தூர பஸ்கள் வண்டு செல்கின்றன.

கோவிலின் பெருமை தெரிந்தவர்கள் இரு சக்கர வாகனம் மற்றும் கார்களில் வந்து செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
வன்னிமரத்தினை மேற்கூரையாக கொண்டு வீற்றிருக்கும் வன்னிவிநாயகரை வணங்கி செல்பவர்களுக்கு காரியத்தில் உள்ள தடைகள் நீங்கி வெற்றி மேல் வெற்றி கிட்டும். திருமணத் தடைகள் நீங்கும், வியாபாரம் செழிக்கும், குழந்தை பாக்கியம் கிட்டும், நவகிரகதோஷம் நீங்கி வளம் பெருகி, நலம் உண்டாகும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
முன்னொரு காலத்தில் அவுரவர் முனிவர் சமேதை தம்பதியருக்கு சமி என்ற மகள் பிறந்தாள். சமிக்கும் தவுமிய முனிவரின் புதல்வன் மந்தாரன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.
திருமணத்துக்கு பிறகு மந்தாரன், சமியை அழைத்துக்கொண்டு வனத்தின் வழியாக சென்றபோது விநாயக பெருமானின் உருவ தோற்றத்தையுடைய அப்புருகண்டி முனிவரை பார்த்து ஏளனம் செய்தார்கள். அதனால் கோபமுற்ற முனிவர், அவ்விருவரையும் யாருக்கும் பயன்படாத மரங்களாக கடவீர் என சபித்தார்.
முனிவரின் மகத்துவம் அறியாத அவ்விருவரும் சாபத்திற்குள்ளாகி அன்று முதல் சமி என்பவள் வன்னி மரமாகவும், மந்தாரன் என்பவன் மந்தாரை மரமாகவும் தோன்றினார்கள்.
அவ்விருவரின் சாபம் நீங்க சவுனக முனிவர் , விநாயகப்பெருமானை நோக்கி கடும் தவம் செய்தார். முனிவரின் தவத்தினால் மனம் மகிழ்ந்து அவர் முன் தோன்றி உனக்கு வேண்டிய வரங்கள் கேள் என்று விநாயகபெருமான் அருளினார்.’
முனிவர், அவ்விருவரின் குருகுல முனிவரான அப் புருகண்டி முனிவரின் சாபத்தினால் மரமாகியவர்களை மானிட உருவம் தரிக்க வேண்டும் என வேண்டினார். விநாயக பெருமான், அப்புருகண்டி முனிவர் மிக சிறந்த தவச்சிரேஷ்டர் . அவரது சாபம் யாராலும் நீங்க இயலாது. நீங்கள் எம்மிடத்தில் அன்பு செலுத்தியமையால் அவர்கள் அம்மரமாகவே சிறப்புகளை பெற்றும், அவர்களின் நிழலில் எழுந்தருளியிருந்து நம்மை வழிபடுவாயாக என அருளினார்.
அதுமுதல் சமி என்னும் வன்னிமரத்து நிழலில் வீற்றிருந்து வன்னி விநாயகபெருமானாக வேண்டுவோருக்கு வேண்டுவன அருள்பாலித்து வருகிறார். விநாயகபெருமானுக்குரிய அருகு, மந்தாரை, வன்னி என்னும் இவற்றின் பெருமையை அளவிட முடியாது.
அருகு, மந்தாரை இல்லாத குறையை வன்னி இலையின் பெருமை நிரப்புவதாலும், யாக அக்னியானது எப்போதும் இவ்வன்னியில் வாசமாயிந்தாலும் உலகில் உள்ள எல்லா பத்திரங்களிலும் வன்னி பத்திரம் விசேஷமானது. சிவ பெருமானின் தனது சடமகுடத்தில் வில்வ இலையை போல் ஓர் அங்கமாக வன்னி பாத்திரமும் அணிந்து உள்ளார். இவ்வாறு வன்னி மரத்தின் பெருமை புராண சிறப்பாக கூறப்பட்டுள்ளது. வன்னி விருட்சம் என்பதை வட மொழியில் `சமி’ விருட்சம் என கூறுவர்.
இந்த கோவிலில் உள்ள வன்னி மரம் மிக பழமை வாய்ந்த பசுமையாக காட்சி அளிக்கிறது. சுமார் 3௦௦ ஆண்டுகளாக இந்த வன்னி மரத்தின் கீழ் விநாயகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். தென் திசை நோக்கி செல்லும் சித்தர்களும் இம்மரத்தடியில் தங்கி தியானம், சிறப்பு வழிபாடு செய்து சென்றுள்ளார்கள் என சொல்லப்படுகிறது.
பல ஆண்டுகளாக திறந்தவெளியாக இருந்த வன்னிமரத்து விநாயகர் திருக்கோவில் பக்தர்களின் முயற்சியாலும், திருப்பணியில் அதிகம் ஈடுபாடு உடையவர்களாலும் பெரும் முயற்சி செய்து விநாயகருக்கு பீடம் அமைத்து, மரத்தை சுற்றி கருங்கல் மேடை அமைத்து, திருக்குட நன்னீராட்டு விழா செய்து வழிபட்டு வருகிறார்கள்.
தற்போது 29 ஆண்டுக்குள் வன்னி விநாயகருக்கு வன்னி விருட்சத்துடன் கூடிய அழகான கருவறை மண்டபம் அமைக்கப்பட்டு உள்ளது. சேவார்த்திகளின் வசதிக்கென கருவறை மண்டபத்தை சுற்றி சுற்றுப்பிரகார மண்டபம் சீரிய முறையில் பளிங்கு கற்கள் பதிக்கப்பெற்று அழகான முறையில் அமைக்கப்பட்டுள்ளது.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்று வருகிறது. கடைசியாக திருக்குட நன்னீராட்டு விழா 30.8.1994 அன்று நடைபெற்றது.
இந்த கோவில் 1 ஏக்கர் 76 சென்ட் பரப்பளவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் தினமும் இரண்டு காலம் ஆகம விதிப்படி பூஜைகள் நடக்கின்றன,
காலை 7 மணிக்கு காலசந்தி பூஜையும், மாலை 6.30 மணிக்கு சாயரட்சை பூஜையும் நடக்கிறது. பக்தர்கள் வசதிக்காக காலை 6.30 மணி இரவு 8.30 மணி வரை திறக்கப்பட்டிருக்கும்.
இந்து சமய அறநிலைய ஆட்சி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில் இணை ஆணையராக எஸ்.கனகய்யா, உதவி ஆணையராக இரா.பத்மநாபன், உள்ளனர். தினமும் பூஜைகளை வெங்கடேச குருக்கள், அவரது மகன் பிரசன்னா வெங்கடேச குருக்கள் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
பல ஆண்டுகளாக இக்கோவிலுக்கு பாத்தியப்பட்ட கிராமங்களான பெத்து ரெட்டிபட்டி, பெரிய ஓடைப்பட்டி, சின்னத்தம்பியாபுரம், ஒ.சங்கரலிங்கபுரம், சின்ன ஓடைப்பட்டி ஆகிய 5 கிராம மக்களால் நிர்வகிக்கப்பட்டு வந்தது.பின்னர் இந்து சமய அறநிலைய சட்டத்தின் ஆளுகைக்கு உட்பட்டு மேற்படி 5 கிராம பிரதிநிகளின் வழிவந்த அறங்காவலர்களை கொண்டு 1983 ம் ஆண்டு முதல் நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. முதல் அறங்காவலராக , அறங்காவலர் குழு தலைவராக முன்னாள் எம்.எல்.ஏ. சங்கிலி செயல்பட்டு வந்திருக்கிறார்.
தற்போது நிர்வாக அறங்காவலராக சுப்பையா, அறங்காவலர்களாக வேலுச்சாமி, ராமசுப்பு, சுப்பையா மணியார், வெங்கடேஸ்வரன் ஆகியோர் உள்ளனர்.
இந்த கோவில் இந்து சமய அறநிலைய ஆட்சி துறைக்கு உட்பட்ட சிவகங்கை இணை கோட்டம் இணை ஆணையரின் அதிகார வரம்பிற்கு உட்பட்டதும், விருதுநகர் உதவி கோட்ட பிரிவு உதவி ஆணையர் மற்றும் ஆய்வாளரின் ஆளுகைக்கு உட்பட்டதாகும்
“புராண காலத்தில் பாண்டவர்கள் தாங்கள் போர்புரியும் ஆயுதங்களை வன்னிமரத்தின் பொந்தில் பாதுகாப்பாக வைத்து இருந்ததாக ஒரு தகவல் நிலவுகிறது. நினைத்த காரியத்தை வெற்றிகரமாக முடித்து வைத்து வளமும், நலமும் தருபவராக கருணை மழை பொழிபவராக வன்னிவிநாயகர் வீற்றிருக்கிறார். அவரை விநாயகர் சதுர்த்தியன்று வழிபட்டால் எல்லா நன்மைகளும் கிடைக்கும், ” என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.
பரிகார தெய்வமாக விளங்கும் வன்னிமர விநாயகரின் மகத்துவம் பற்றி தெரிந்து கொள்வோம்….
சுமார் 300 வருடங்களுக்கு முன்பாக ஓடைபட்டி கிராமத்தில் மழை இல்லாமல் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. நிறைய மக்கள் பசியால் இறந்து கூட போனார்கள். வறட்சி சமயத்தில் இந்த கிராமத்துக்கு வந்த ஒருவர் வன்னி மரத்தடியில் அமர்ந்திருக்கும் விநாயகரை வணங்கி ஆசிர்வாதம் பெற்று அருகில் இருந்த குளத்தை தூர்வாரி சீர் படுத்தினார். அதன்பின்பு அந்த ஊரில் நல்ல மழை பொழிந்து நீர்நிலைகள் நிரம்பி செழிப்பாக மாறியது.
இன்றளவும் அந்த கிராமத்தில் அந்த ஊர் மக்கள் வன்னி மரத்தடி விநாயகரை வழிபட்டு வருகிறார்கள். இந்த ஊர் செழுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக அந்த குளத்தை சீரமைத்தவர் அண்ணாமலை செட்டியார் என்பவர் தான். இவரை நினைவு கூறும் வகையில் கோவிலுக்கு அருகிலேயே இவருக்கு சிலை அமைக்கப்பட்டு பூஜைகளும் செய்யப்பட்டு வருகிறது.
இந்த கோவிலில் இருக்கும் விநாயகருக்கு இந்த ஊர் மக்கள் பணம் திரட்டி 1982-ம் ஆண்டு கோவில் அமைத்தனர். இந்த கோவிலில் இருக்கும் விநாயகருக்கு 11 வாரம் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டிய பிரார்த்தனை நிச்சயம் நடக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

சில நூறு வருடங்களுக்கு முன்பு விதர்ப்ப நாட்டை ஆண்டு வந்த மன்னன் ஒருவன் மக்களை கொடுமைப்படுத்தினான். மன்னன் செய்யும் பாவத்திற்கு துணையாக ஒரு அமைச்சரும் இருந்தார். இந்த மன்னனும் அமைச்சரும் அடுத்த பிறவியில் ஒருவரை ஒருவர் துரத்தி கொள்ளும்படியான அவதாரத்தை எடுத்தனர்.
எப்படி? காகமும் ஆந்தையுமாகவும், பாம்பும் தேளாகவும், நாயும் பூனையும், மீன் முதலாகவும் இப்படி ஒன்றை ஒன்று தாக்கிக் கொள்ளும் பிறவியாக அவதரித்தார்கள். இவர்களுக்கு மோட்சம் ஏற்படவில்லை. அடுத்தடுத்து பிறவி எடுத்து ஒருவரை ஒருவர் சண்டை போட்டு சாகடிப்பது தொடர்ந்து வந்தது.
இந்த சம்பவம் தொடர, ஒருசமயம் மன்னனும் அமைச்சரும், வேடனும் ராட்சசனுமாக பிறந்தனர். ஒருவரை ஒருவர் துரத்திக் கொண்டு செல்ல, ராட்சசனிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக வேடன் வன்னி மரத்தின் மேலே ஏறினான். அவன் ஏறும் சமயத்தில் வன்னி மரத்தில் உள்ள இலைகளானது, விநாயகரின் மீது விழுந்தது. வேடனை துரத்தி சென்ற ராட்சசனும் வன்னி மரத்தின் மேலே ஏறினான். அந்த சமயத்தில் வன்னி மர இலைகள் விநாயகரின் மீது விழுந்தது.
ஆகவே இருவரின் மூலமாக வன்னி மரத்து விநாயகர் வன்னி மரத்து இலைகளால் அர்ச்சனை செய்யப்பட்டார். அந்த சமயம் இருவருக்கும் ஏற்பட்ட சண்டையில், இருவரும் தங்களது உயிரை இழந்து சிவலோகத்தில் மோட்சத்தை பெற்றனர் என்று கூறுகிறது வரலாறு.
இவ்வாறாக இவர்கள் இருவரும் செய்த பாவத்திற்கு மோட்சம் தந்த அந்த வன்னி மரத்தடி விநாயகர் , நாம் முன் ஜென்மத்தில் செய்த பாவத்திற்கும் நன்மை செய்வார் அல்லவா? இதற்காகத்தான் இவருக்கு இவ்வளவு சிறப்பு.
இதன் மூலம் வன்னி மரத்தடி விநாயகருக்கு அதிக சக்தி உண்டு என்பதை புரிந்துகொள்ள வேண்டும். வன்னி மரத்தடி விநாயகரை மனதார நினைத்து வேண்டிக் கொள்ளுங்கள். உங்களது துன்பமும் தீரும்…!
தொகுப்பு:SKTS திருப்பதிராஜன்-கோவில்பட்டி
