பா.ஜ.க. அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற காங்கிரசார் கைது

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி எம்.பியை , ராவணனாக சித்தரித்து பிரதமர் மோடி பேசிய விவகாரத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பா.ஜ.க அலுவலகங்களை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் அழகிரி அறிவித்து இருந்தார்.
அதன் படி கோவில்பட்டியில் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் துாத்துக்குடி வடக்கு மாவட்ட பா.ஜ.,க அலுவலகம் நோக்கி காந்தி மண்டபத்திலிருந்து கோஷம் எழுப்பியபடி ஊர்வலமாக காங்கிரசார் சென்றனர். நகர தலைவர் அருண்பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் அய்யலுசாமி, ஐ.என்.டி.யூ.சி., ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட செயலாளர் ஜோஷ்வா, எஸ்.சி, எஸ்.டி பிரிவு மாவட்ட தலைவர் கண்ணாயிரம் முத்து, மரியா சூசை ராஜ், சுடலைமணி, பழனிசாமி, மகேந்திரன், அல்வின், அருணாச்சலம் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஊர்வலமாக சென்றவர்களை பழைய பஸ் நிலையம் முன்பு போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். பின்னர் 13 பேரை கைது செய்து ஒரு திருமண மண்டபத்துக்கு கொண்டு சென்று தங்க வைத்தனர். பிறகு இரவில் விடுவிக்கப்பட்டனர். காங்கிரஸ் போராட்டம் எதிரொலியாக கோவில்பட்டி பழைய பஸ் நிலையத்தில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.
