மருத்துவமனை முன்பு நிறுத்திய ஸ்கூட்டர் திருட்டு; சி.சி.டி.வி.ஆதாரம் சிக்கியது

கோவில்பட்டி அருகே உள்ள ஏழாயிரம்பண்ணை பகுதியைச் சேர்ந்த திருப்பதி என்பவர் மனைவி அகிலா. இவர் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள தனியார் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். நேற்று காலை இவர் கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு வந்தார். மருத்துவ பரிசோதனைக்காக வந்த அவர், தனது ஸ்கூட்டரை .மருத்துவமனைக்கு முன்புறம் சாலையில் நிறுத்திவிட்டு , சாவியை எடுக்காமல் உள்ளே சென்றதாக தெரிகிறது.
சிறிது நேரம் கழித்து மருத்துவ பரிசோதனை முடிந்து வெளியே வந்த அகிலா, தனது ஸ்கூட்டர் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தனியார் மருத்துவமனை பகுதியில் இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தனர்.
.அப்போது, லுங்கி அணிந்த மர்ம நபர் தோளில் ஒரு பையை தொங்கவிட்டிருந்தார். மொபைல் போனில் பேசியபடி சிறிது நேரம் ஸ்கூட்டர் அருகே நிற்கிறார். பின்னர் அந்த ஸ்கூட்டரை உரிமையாளர் எடுத்து செல்வது போன்று சாதரணமாக ஓட்டி சென்று விட்டார். சி.சி.டி.வி. காட்சிகளை ஆதாரமாக கொண்டு ஸ்கூட்டரை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
