• June 7, 2025

`வந்தே பாரத் ரெயில் கோவில்பட்டியில் நிற்கும்’ என்ற அறிவிப்பு கண்டிப்பாக வரும்; ஆர்ப்பாட்டத்தில் துரை வைகோ பேச்சு

 `வந்தே பாரத் ரெயில் கோவில்பட்டியில் நிற்கும்’ என்ற அறிவிப்பு கண்டிப்பாக வரும்; ஆர்ப்பாட்டத்தில் துரை வைகோ பேச்சு

சென்னை – திருநெல்வேலி இடையே இயக்கப்படும் ‘வந்தே பாரத்’ விரைவு ரெயில் கோவில்பட்டியில் நின்று செல்ல வலியுறுத்தி நேற்று மாலை மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

அண்ணா பஸ் நிலையம் எதிரே பயணியர் விடுதி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தலைமை தாங்கி  பேசியதாவது:-

 கோவில்பட்டி மிகப்பெரிய வணிக நகரம். எதிர்காலத்தில் மாவட்டமாக உருவாகும் போது அதன் தலைநகராகவும் கோவில்பட்டி இருக்கப் போகிறது. இவ்வளவு முக்கியமான, மையப்பகுதியில் உள்ள கோவில்பட்டி நகரை ரெயில்வே துறை புறக்கணிக்கலாமா?.

வந்தே பாரத் ரெயில் கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நிற்கும் வரை மதிமுக சார்பில் போராட்டங்கள் நடைபெறும். மதிமுகவின் ஆர்ப்பாட்டத்துக்கு பின்னர் வந்தே பாரத் ரெயில் கோவில்பட்டியில் நிற்கும் என்ற அறிவிப்பு கண்டிப்பாக வரும். அப்போது அந்த வெற்றியில் பங்கு போட்டுக் கொள்ள சில அரசியல் கட்சிகளும் வரும். அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை.

தமிழகத்தின் வாழ்வாதார பிரச்சினைக்கு முதல் வீரனாக வந்து நிற்பவர் வைகோ. அவருக்கு அவரது சொந்த மண்ணிலே இரண்டு முறை நாடாளுமன்ற தேர்தல், ஒரு முறை சட்டமன்றத் தேர்தலிலும் தேர்தல் அரசியல் தோல்வியைத்தான் கொடுத்தது. எல்லாம் பண அரசியல். இதற்காக எல்லாம் வைகோ ஒரு நாளும் கவலைப்பட்டதில்லை. தேர்தல் தோல்விகளால் வைகோவோ மதிமுகவோ தமிழருக்கான உரிமைப் போராட்டங்களில் இருந்து பின்வாங்கியது இல்லை. மக்கள் பிரச்சினைக்கு உரிய தீர்வு காண வேண்டி தான் வைகோ செயல்படுகிறார்.

வந்தே பாரத் ரெயில் கோவில்பட்டியில் நிற்பதற்காக கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ. எடுக்கும் முயற்சிகளுக்கு மதிமுக துணை நிற்கும். வந்தே பாரத் ரெயில் கோவில்பட்டியில் நிற்க வேண்டும். அதேபோல் மக்கள் பிரச்சினைகளுக்காக அரசியல் எல்லைகளை கடந்து அனைத்து அரசியல் இயக்கங்களும் ஒன்று திரண்டன என்ற முன் உதாரணத்தை நாம் கோவில்பட்டியில் தொடங்குவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில்  துணை பொதுச் செயலாளர் தி.மு.ராசேந்திரன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். சட்டமன்ற உறுப்பினர்கள் தி.சதன் திருமலை குமார், ஏ.ஆர்.ஆர்.ரகுராமன், மாவட்டச் செயலாளர்கள் ஆர்.எஸ்.ரமேஷ், புதுக்கோட்டை பி.செல்வம், தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் இல.சுதா பாலசுப்பிரமணியன், கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் விநாயகா ஜி.ரமேஷ், நகர செயலாளர் எஸ்.பால்ராஜ் மற்றும் ஏராளமானவர்கள்  கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

ஆர்ப்பாட்டம் முடிவில் துரை வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

 வந்தே பாரத் ரெயில் கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நிற்காது என்ற வந்த சில மணி நேரங்களில் மத்திய ரெயில்வே அமைச்சரிடம் கோவில்பட்டியில் வந்த பாரத் ரெயில் நிற்க வேண்டும் என வலியுறுத்தியது மட்டுமல்லாமல் கோவில்பட்டியில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் மதிமுக தலைவர் வைகோ அறிவித்தார்.

வைகோ அறிவிப்புக்கு பின் மத்திய அமைச்சர் எல்.முருகன் வந்தே பாரத் ரெயில் கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்துள்ளார். அதனை நாங்கள் வரவேற்கிறோம்.

என்ன பொறுத்தவரை திராவிட இயக்கங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து தமிழ்நாட்டில் இருந்து மதவாத சக்தியான பாஜகவை வேரோடும் வேரடி மண்ணோடும் அகற்ற வேண்டும். பாஜகவை விட்டு விலகுவது என்ற முடிவை அதிமுக எடுத்துள்ளதை  தமிழகத்தில் உள்ள அனைத்து திராவிட இயக்கங்களும் வரவேற்கும்.

இவ்வாறு துரை வைகோ கூறினார்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *