• June 7, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமில் நலத்திட்ட உதவிகள்; அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்

 மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமில் நலத்திட்ட உதவிகள்; அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்

கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாற்று திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் முகாமை தொடங்கி வைத்து பேசுகையில் கூறியதாவது:-

 தூத்துக்குடி மாவட்டத்தில் 42,727 மாற்றுத்திறனாளிகள் தமிழ்நாடு அரசின் அடையாள அட்டை பெற்றுள்ளனர். மத்திய அரசின் தேசிய அடையாள அட்டை 21,337 பேருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் தேசிய அடையாள அட்டை பெறுவதற்கும் இந்த முகாமில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஆதார் அட்டை பெறுவதற்கும் முகாமில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்கள், நடமாட முடியாதவர்கள் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளை பராமரிப்பவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த வகையில் நமது மாவட்டத்தில் இந்த ஆண்டு தற்போது வரை 92 பேர் பயன் பெற்றுள்ளனர். மேலும் 53 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

தூத்துக்குடி அரசு மருத்துவமனை மாற்று திறனாளிகள் நல அலுவலகம் ஆகியவற்றில் வாரந்தோறும் வியாழக்கிழமையும், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் செவ்வாய் கிழமை நேரில் சென்றால் அடையாள அட்டை வாங்கிக் கொள்ளலாம்.

இவ்வாறு அமைச்சர் கீதா ஜீவன் கூறினார்.

தொடர்ந்து 11 பேருக்கு நலவாரிய இயற்கை மரண நிதி உதவி திட்டத்தின் கீழ் தலா ரூ.17 ஆயிரத்துக்கான காசோலை, ஒருவருக்கு கல்வி உதவித்தொகை, ஒருவருக்கு மூக்கு கண்ணாடி, 23 பேருக்கு திறன் பேசி கருவி என மொத்தம் 36 பேருக்கு ரூ.4.99 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் ஜேன் கிறிஸ்டிபாய், தாசில்தார் லெனின், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ராஜ்குமார், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம், கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் சந்திரசேகர், தி.மு.க. ஒன்றிய செயலாளர் பீக்கிலிப்பட்டி முருகேசன், நகராட்சி ஆணையர் கமலா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேஷ் குமார், ராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *