கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காத பெண்கள் 30-ந்தேதி வரை மேல்முறையீடு செய்யலாம் ; கோவில்பட்டி தாசில்தார் அறிவிப்பு

கோவில்பட்டியில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை (மாதம் ரூ.1000) கிடைக்காத பெண்கள் மேல்முறையீடு மனு கொடுப்பதற்காக சிறப்பு முகாம் நடந்து வருகிறது. தாலுகா அலுவலகத்தில் நடந்து வரும் இந்த முகாமில் மேல்முறையீடு மனு கொடுப்பதற்காக ஏராளமான பெண்கள் குவிந்தனர்.
பெண்கள் அதிக அளவில் வந்ததால், விண்ணப்பத்தின் நிலைகுறித்தும், மேல்முறையீடு குறித்தும் விளக்கம் அளிக்க டோக்கன் வழங்கப்பட்டது. இந்த டோக்கனை வாங்குவதற்கு பெண்கள் முண்டியடித்து கொண்டு சென்றதால் நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி வயதான பெண்கள் சிலர் மயங்கினர். அவர்களை ஓரமாக அழைத்து சென்று அமர வைத்தனர். அந்த அறைக்குள் நெரிசல் ஏற்பட்டதால், அதிகாரிகளுடன் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும், அப்பகுதியில் கூச்சல் நீடித்த நிலையில், தாசில்தார் லெனின் மற்றும் போலீசார் பெண்களை சமாதானப்படுத்தினர். அப்போது தாசில்தார் லெனின் கூறுகையில், வருகிற 30-ந்தேதி வரை முகாம் நடைபெறும். அதுவரை பொறுமையாக வந்து மேல்முறையீடு செய்யலாம். அனைவரது மேல்முறையீடுகளும் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
இதை தொடர்ந்து டோக்கன் அடிப்படையில் பெண்கள் அழைக்கப்பட்டு மேல்முறையீடு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.


இதற்கிடையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மேற்கொண்ட நடவடிக்கையின் பயனாக இன்று கோவில்பட்டி தாலூகா அலுவலகத்தில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பெண்கள் ஒரே இடத்தில் அடைத்து வைக்கமால் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அமரவைக்கப்பட்டு விண்ணப்பத்தின் நிலை குறித்து பெண்களுக்கு எடுத்து கூறி வருகின்றனர்.
