புகையிலை இல்லா கிராமமாக திருப்பணிசெட்டிகுளம் தேர்வு

தேசிய அளவிலான புகையிலை தடுப்பு சட்ட அமலாக்கப் பணிகள் மாநில மற்றும் மாவட்ட அளவில் அமல்படுத்திட விரைந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவின்படி, ஸ்ரீவைகுண்டம் வட்டாரத்திற்குட்பட்ட திருப்பணிசெட்டிகுளம் என்ற ஊராட்சி புகையிலை இல்லா கிராமமாக தேர்வு செய்யப்பட்டது.
புகையிலை இல்லாத கிராம ஊராட்சியாக தீர்மானிக்கும் சிறப்பு கிராம சபை கூட்டம் திருப்பணிசெட்டிகுளத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சுயம்புலிங்கம் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக தூத்துக்குடி சுகாதார பணிகள் துணை இயக்குநர் பொற்செல்வன், ஸ்ரீவைகுண்டம் துணை காவல் கண்காணிப்பாளர் மாயவன் மற்றும் சீனிவாச சேவை அறக்கட்டளை இயக்குநர் விஜயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன், ஏரல் வட்டார மருத்துவ அலுவலர் தினேஷ் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
இக்கூட்டத்திலசுகாதார பணிகள் துணை இயக்குநரின் நேர்முக உதவியாளர் மதுரம் பிரைட்டன் வரவேற்று பேசினார். இக்கூட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் வட்டாரத்திற்குட்பட்ட திருப்பணி செட்டிகுளம் என்ற கிராமம் புகையிலை இல்லா கிராமமாக ஊராட்சி செயலாளர் இந்துமதி முன்மொழிய, ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடாந்து புகையிலை இல்லா கிராமம் திருப்பணி செட்டிகுளம் என்ற அறிவிப்பு பலகையை சுகாதார பணிகள் துணை இயக்குநர் ச.பொற்செல்வன் திறந்து வைத்தார்.
திருப்பணிசெட்டிகுளம் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் பொது மக்கள், வியாபாரிகள் ஆகியோரால் புகையிலை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
