அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை

தி.நகர் சத்யா, ஆர்.எஸ்.ராஜேஷ்.
அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தி.நகர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் சத்ய நாராயணன் (சத்யா). இவர் வருமானத்திற்கு அதிகமான சொத்துக்குவித்துள்ளதாகவும், தன் சொத்து மதிப்பை மறைத்து தி.நகர் தொகுதியில் போட்டியிட்டதாகவும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்து 2 மாதத்திற்குள் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநில லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இந்நிலையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். முன்னாள் எம்.எல்.ஏ. சத்யாவின் வீடு உள்பட அவருக்கு தொடர்புடைய 18 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் வடபழனி, நெற்குன்றம் உள்பட 16 இடங்களிலும் திருவள்ளூர், கோவையில் தலா ஒரு இடத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வடசென்னை வடகிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் தண்டையார்பேட்டையில் உள்ள ஆர்.எஸ். ராஜேஷ் வீட்டில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா, அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் ராஜேஷ் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்தும் சோதனையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், சோதனை நடைபெற்றுவரும் இடங்களில் அ.தி.மு.க.வினர் குவிந்து வருவதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
